ஓராண்டுக்கு மத்திய அரசின் புதிய திட்டங்கள் எதுவும் கிடையாது... மொத்தமாக கைவிரித்த நிதி அமைச்சகம்..!
இந்த நிதியாண்டில் வேறு எந்த திட்டத்திற்கும் ஒப்புதல் அளிக்கப்படாது. புதிய திட்டங்களுக்கான நிதி ஒதுக்க கோரி நிதி அமைச்சகத்திற்கு அனுப்புவதை நிறுத்துமாறு அனைத்து துறை அமைச்சகங்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது
கொரோன வைரஸ் தொற்று பாதிப்பால் மத்திய அரசின் செலவினங்களை குறைக்கும் வகையில் அடுத்த ஓராண்டுக்கு புதிய திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படாது என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக மத்திய நிதித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ’’இந்தியாவில் பரவியுள்ள கொரோனா வைரஸ் காரணமாக பெரும்பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் ரூ.20 லட்சம் கோடி அளவிற்கு ஊக்கச் சலுகை திட்டத்தினை மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் மத்திய அரசின் செலவினங்களை குறைக்கும் நடவடிக்கையாக இனி புதிய திட்டங்கள் ஓராண்டுக்கு அறிவிக்கப்படாது. இருப்பினும் பிரதமரின் காரிப் கல்யாண் தொகுப்பு மற்றும் ஆத்மனிர்பர் பாரத் திட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்புகளுக்கு மட்டுமே செலவு அனுமதிக்கப்படும். இவற்றை தவிர இந்த நிதியாண்டில் வேறு எந்த திட்டத்திற்கும் ஒப்புதல் அளிக்கப்படாது. புதிய திட்டங்களுக்கான நிதி ஒதுக்க கோரி நிதி அமைச்சகத்திற்கு அனுப்புவதை நிறுத்துமாறு அனைத்து துறை அமைச்சகங்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது’’எனகூறப்பட்டுள்ளது.