OPS vs EPS : இபிஎஸ்க்கு ஆதரவு தெரிவித்த தேனி மாவட்ட நிர்வாகிகள்..! சொந்த கோட்டையே ஓபிஎஸ்சை கைவிட்ட பரிதாபம்..
அதிமுகவில் ஒற்றை தலைமை தொடர்பான கோரிக்கை எழுந்துள்ள நிலையில், தேனி மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வாவதற்கு தங்களது ஆதரவுகளை தெரிவித்துள்ளனர்.
இபிஎஸ்க்கு பெருகும் ஆதரவு
அதிமுகவில் ஒற்றை தலைமை தொடர்பாக முழக்கங்கள் எழுந்துள்ள நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். வருகிற 23 ஆம் தேதி நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழுவில் ஒற்றை தலைமையாக எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து தனி தீர்மானம் நிறைவேற்ற திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்க்கு ஓ.பன்னீர் செல்வம் மறுப்பு தெரிவித்துள்ளார். இரட்டை தலைமை தான் தொடர வேண்டும் என்றும் தற்போது உள்ள சூழ்நிலையில் ஒற்றை தலைமை தேவையில்லை என கூறி வருகிறார். இருந்த போதும் எடப்பாடி பழனிசாமிக்கு 50க்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். எனவே ஒற்றை தலைமையாக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுப்பதற்கான சூழ்நிலை அதிகரித்துள்ளது. பொதுக்குழுவில் ஒற்றை தலைமை தொடர்பாக தீர்மானம் கொண்டு வந்தால் பொதுக்குழு கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டிய நிலை வரும் என ஓபிஎஸ் அதிமுக நிர்வாகிகளிடம் எச்சரித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஓபிஎஸ்சை கைவிட்ட சொந்த மாவட்டம்
இந்தநிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு 10 முதல் 15 மாவட்ட செயலாளர்கள் மட்டுமே ஆதரவு தெரிவித்த நிலையில், தற்போது ஓ.பன்னீர் செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனி பகுதியில் உள்ள நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தங்களது ஆதரவு தெரிவித்துள்ளனர். தேனி மாவட்ட அதிமுக பொருளாளர் சோலை ராஜ், தேனி மாவட்ட முன்னாள் துணைச் செயலாளர் முறுக்கோடை ராமர், தேனி நகர செயலாளர் கிருஷ்ணகுமார் தேனி மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் செந்தட்டி காளை, கம்பம் முன்னாள் ஒன்றிய செயலாளர் இளைய நம்பி, பெரியகுளம் ஒன்றிய கழக முன்னாள் செயலாளர் அண்ண பிரகாஷ், முன்னாள் கம்பம் எம்எல்ஏ ஜக்கையன் உள்ளிட்டோர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தங்களது ஆதரவுகளை தெரிவித்துள்ளனர். இதே போல அதிமுக இளைஞர் அணியும் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தங்களது ஆதரவுகளை தெரிவித்துள்ளனர். இந்த தகவல் ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்கள்