திமுக, தங்களின் கையாலாகாததனத்திற்கு அதிமுக-பாஜக அரசுகளை குறைசொல்லி தப்பிக்கும் முயற்சியாகவே இந்த வெள்ளை அறிக்கை உள்ளது என்று புதிய தமிழகம் நிறுவனர் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். 

தமிழக அரசின் நிதி நிலைமை பற்றி நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று வெள்ளை அறிக்கை வெளியிட்டார். தமிழகத்துக்கு ஏற்பட்ட நிதிச் சீரழிவால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.2.63 லட்சம் கடன் தலையில் ஏறியிருக்கிறது என்று பகீர் தகவலை வெளியிட்டார். இந்த வெள்ளை அறிக்கையால் தமிழகத்தில் பேருந்து, மின்சாரம் கட்டணம் அதிகரிக்கப்படலாம், சொத்துவரி உயரலாம் என்று கூறப்படுகிறது. இந்த வெள்ளை அறிக்கைக்கு பல கட்சித் தலைவர்களும் ஆதரவாகவும் எதிராகவும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். 
அந்த வகையில் புதிய தமிழகம் நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “திமுக தனது தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியாததற்கான காரணம் தேடும் வெற்று அறிக்கையாகவே இன்றைய வெள்ளை அறிக்கை உள்ளது. திமுகவின் பட்ஜெட்டுக்கு முன்பான வெள்ளை அறிக்கை வாண வேடிக்கையாக இருக்கும் என பெரிது எதிர்பார்க்கப்பட்டது; ஆனால் அது புஷ்வாணமாகவே முடிந்து போய்விட்டது. வரி விதிப்பு இல்லாத ஜீரோ பட்ஜெட் இருக்க முடியாது என்று சொல்வதன் மூலம், 13-ஆம் தேதி பட்ஜெட்டில் பெரிய அளவிற்கு வரி விதிப்புக்கள் உண்டு என்பதை சொல்லாமல் சொல்வதாகவே உள்ளது. திமுக, தங்களின் கையாலாகாத தனத்திற்கு அதிமுக-பாஜக அரசுகளை குறைசொல்லி தப்பிக்கும் முயற்சியாகவே இந்த வெள்ளை அறிக்கை உள்ளது.” என்று கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred