The verdict of the two cases is pleasurable - Edappadi Palanasamy

இரண்டு வழக்குகளி தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது என்றும், காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை அணுகி சட்டரீதியாக நம்முடைய உரிமையைப் பெறுவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கடந்த பிப்ரவரி மாதம் 18 ஆம் தேதி முதமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. நம்பிக்கை வாக்கெடுப்பின் போது ஓ.பன்னீா்செல்வம் உள்பட அவரது ஆதரவு சட்டமன்ற உறுப்பினா்கள் 11 போ் முதல்வா் மீது நம்பிக்கை இல்லை என்று வாக்களித்தனா். இதனைத் தொடா்ந்து அதிமுக கட்சியின் கொறடா உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீா் செல்வம் உள்பட நம்பிக்கை இல்லை என்று வாக்களித்த 11 சட்டமன்ற உறுப்பினா்களையும் கட்சி தாவல தடை சட்டத்தின்கீழ் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று தி.மு.க. கொறடா சக்கரபாணி சென்னை
உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தார்.

தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. அரசியலில் பெசிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட இந்த வழக்கில், துணை முதலமைச்சர் ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களையும் பதவி நீக்கம் செய்ய முடியாது என்று கூறி மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். இதையடுத்து ஓபிஎஸ், அமைச்சர் மாபா பாண்டியராஜன், மற்றும் 11 எம்எல்ஏக்களின் பதவி தப்பியது.

இதேபோல், சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என்று உச்சநீதிமன்றம் உறுதி செய்திருக்கும் நிலையில், அவரது புகைப்படத்தை தமிழக சட்டப்பேரவையில்
சபாநாயகர் தனபால் கடந்த சில நாட்களுக்கு முன்பு திறந்து வைத்தார். சட்டப்பேரவையில் ஜெ. புகைப்படம் திறக்கப்பட்டதை எதிர்த்து, திமுகவைச் சேர்ந்த அன்பழகன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில், உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையிலான அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும், சபாநாயகர் நிர்வாகத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றம் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

இந்த இரண்டு வழக்குகளின் தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சேலம் எடப்பாடியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், இரு வழக்குகளின் தீர்ப்பு மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார்.

காவிரி விவகாரம் குறித்து செய்தியாள்ர்கள் கேள்வி எழுப்பியபோது, திமுக அனைத்து கட்சி கூட்டம் தனியாக நடத்தி உள்ளது. நாங்கள் ஏற்கனவே அனைத்து கட்சி கூட்டம் டத்தியுள்ளோம். அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அதனை மத்திய அரசுக்கு அனுப்பி உள்ளோம்.

இதற்கிடையில், திமுக, கூட்டத்தை தனியாக நடத்தி பிரித்து விட்டார்கள். எனவே, காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை அணுகி நம்முடைய உரிமையைப் பெறுவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.