‘‘மயக்க பிஸ்கெட்டுகள் மாதிரி 80:20 என்ற வெறுப்புப் பிரச்சாரத்தின் வேகம் மற்றவைப் பற்றி பாதிக்கப்பட்ட மக்களை யோசிக்க விடவே இல்லையே’’ என்று சுட்டிக்காட்டியுள்ளார். ‘‘ஹிந்துத்துவாவை எதிர்கொண்டு, மண்டல் மூலம் பதிலளிக்கும் தமிழ்நாட்டின் திராவிட மாடலுக்கும், உத்தரப்பிரதேசத்துக்கும் இடைவெளி பல மைல்கள்’’ என்றும் ஒப்பீடு செய்துள்ளார்!
சிந்தித்து செயல்பட்டால் இன்னும் 2 ஆண்டுகளில் பாஜகவை வீழ்த்த முடியும் என்று திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி தெரிவித்துள்ளார்.
ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் தொடர்பாக கி.வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “பஞ்சாப்பில் பாஜக பெற்ற தோல்வி, எதிர்க்கட்சியான ஆம் ஆத்மி கட்சி பெற்றுள்ள வெற்றியால், காங்கிரஸ் தன்னிடமிருந்த ஆட்சியை இழந்துள்ளது. பாஜக - மோடி தலைமைக்கான செல்வாக்கு என்பது ஆம் ஆத்மி வெற்றியின்மூலம் பஞ்சாபில் பிரதிபலிக்க வில்லை என்றே கொள்ளப்படும். மணிப்பூரில் அறுதிப் பெரும்பான்மைக் கிட்டாததால், ஒரு சுயேச்சையை இணைத்துதான் பா.ஜ.க. ஆட்சி அமைத்திடும் நிலை. உத்தராகண்ட்டில் பா.ஜ.க. வெற்றி பெற்றாலும், பா.ஜ.க. முதல்வர் வேட்பாளர் தோல்வி அடைந்துள்ளார்!
உ.பி.யில் காங்கிரசின் தோல்வி, மாயாவதியின் பகுஜன் கட்சி தோல்வி - இரண்டும் அதிர்ச்சிக்குரிய தோல்விகளாகும். பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி அமைப்பு ரீதியாக தேர்தலுக்கு முன்பே உட்கட்சி பிரச்சினையால் பலவீனப்பட்டது நாடறிந்த உண்மை. கோவாவில் அதற்கு இருந்த வாய்ப்பும் பறிபோனது. காங்கிரஸ் கட்சி தனது அடிக்கட்டுமானத்தையே மாற்றி புதுப்பிக்க வேண்டியது அதன் எதிர்காலத்துக்கு இன்றியமையாதது. காங்கிரசை பலவீனப்படுத்திட உள்ளும் புறமும் பல சக்திகள் வேலை செய்தன. பாஜக பெற்ற வெற்றி தற்காலிகம்தான் என்று நிரூபிக்கவேண்டிய அளவுக்கு காங்கிரஸ் தலைமை சரியாக ஆய்வு செய்து, அதற்குக் கிடைத்துள்ள தொடர் தோல்விகளை ‘அதிர்ச்சி வைத்திய’மாகவே எடுத்து மீள திட்டமிடவேண்டும்.
காங்கிரசிற்கு ஆதரவு பல மாநிலங்களில் இருந்தும், அதை சரியாகத் திரட்டும் பயிற்சி பெற்ற இயந்திரம் இல்லை; ‘தலைவர்’களின்’ தன்முனைப்பு கட்சியை பலவீனப்படுத்தி உள்ளது என்பது எளிதில் எவருக்கும் புரியக்கூடிய ஒன்று. மதச்சார்பின்மை, சமூகநீதி, ஜனநாயகம், பாதுகாக் கப்படவேண்டிய அரசமைப்புச் சட்ட ரீதியான பல வாழ்வாதார உரிமைகள், மாநில உரிமைகள், பன்முக கலாச்சாரம் - இவற்றைப் பாதுகாக்கும் கண்ணோட்டத் தில், பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். வெற்றிகள் - நாட்டின் ஜனநாயகக் கட்டுக்கோப்புக்கும், அரசமைப்புச் சட்ட நெறிமுறைகளுக்கும் விடுக்கும் கேள்விக்குறிகளே என்பதை நன்கு புரிந்து, இந்தத் தோல்விகளிலிருந்து எதிர்க்கட்சிகள் பாடம் கற்றுத் தங்களது பார்வையை, அணுகுமுறையை மாற்றும் புதிய சிந்தனைக்குத் தயாராக வேண்டிய எச்சரிக்கை மணியே, பா.ஜ.க. பெற்ற இந்த வெற்றிகள்.

பா.ஜ.க. பெற்ற வெற்றியைப் பற்றி பிரதமர் மோடி, “‘‘இந்த வெற்றி, ஏழைகளுக்கு ஆதரவான அரசு பா.ஜ.க. என்பதற்கான ஓப்புதல் ஆகும். ஆக்கப்பூர்வ அரசுகள் பா.ஜ.க. அரசுகள் என்பதற்கான அங்கீகாரம்‘’ என்று கூறியுள்ளார். ‘‘இந்த வெற்றி தேசியத்துக்கும், நல்லாட்சிக்கும் கிடைத்த வெற்றி’’ என்கிறார் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத். நேற்று (11.3.2022) டெல்லி பத்திரிகையாளர் சீமா சிஷ்டி என்பவர், ஆங்கில நாளேடு ‘இந்து’வில் எழுதியுள்ள ஒரு செய்திக் கட்டுரையில், ‘‘உத்தரப்பிரதேசத்தில்தான் ஏழைகளான இளைஞர்களின் வேலை கிட்டாதவர்கள் எண்ணிக்கை இந்தியாவிலேயே மிக அதிகமாக கடந்த 5 ஆண்டுகளில் 16 லட்சமாக உயர்ந்துள்ளது.
மாநிலத்தில் ஜி.டி.பி. வளர்ச்சி, உணவு மற்ற பொருளாதார நிலையில், மற்ற மாநில அரசுகளுடன் ஒப்பிடுகையில், மிகவும் கீழே உள்ளது. விலைவாசி ஏற்றம் - இதனால் பாதிக்கப்பட்ட வர்கள் வெளி மாநிலங்களுக்கு வேலைக்குச் சென்று, கொரோனா கொடுமை காரணமாக வேலை கிட்டாது திரும்பிய நிலையில், அவர்களுக்கு ஏற்பட்ட நிலைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், ஹிந்துத்துவா மத உணர்வையே பிரதானமாக்கினார்கள், வென்றுள்ளார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். ‘‘மயக்க பிஸ்கெட்டுகள் மாதிரி 80:20 என்ற வெறுப்புப் பிரச்சாரத்தின் வேகம் மற்றவைப் பற்றி பாதிக்கப்பட்ட மக்களை யோசிக்க விடவே இல்லையே’’ என்று சுட்டிக்காட்டியுள்ளார். ‘‘ஹிந்துத்துவாவை எதிர்கொண்டு, மண்டல் மூலம் பதிலளிக்கும் தமிழ்நாட்டின் திராவிட மாடலுக்கும், உத்தரப்பிரதேசத்துக்கும் இடைவெளி பல மைல்கள்’’ என்றும் ஒப்பீடு செய்துள்ளார்!

இந்தத் தோல்வி முடிவுகளைப் பாடமாகக்கொண்டு எதிர்கட்சியினர் வலுவான கூட்டணி, சமூகநீதி, மாநில உரிமைகள், ஜனநாயகப் பாதுகாப்பு, அரசமைப்புச் சட்ட நெறிமுறைகள் காப்பு அடிப்படையில் ஓரணியை கட்டிட - தமிழ்நாடு திராவிட மாடல் ஆட்சி - அது எப்படி சமூகநீதியை உள்ளடக்கிய பொருளாதார, மாநில உரிமைகள், பன்முக கலாச்சாரப் பாதுகாப்பு என்பதை மய்யப்படுத்தினால், இன்னும் 2 ஆண்டுகாலத்தில் (2024 - மக்களவைத் தேர்தலில்) சாதித்துக் காட்ட முடியும். வீழ்வது முக்கியமல்ல; விரைந்து எழுவதுதான் மிக முக்கியம்! எதிர்க்கட்சிகளின் வலுவான ஒற்றுமை அதிகம் தேவை!
குஜராத்தில் முன்பு மோடிக்கு தேர்தல் ஆலோசகராக இருந்த தேர்தல் வல்லுநர் பிரசாந்த் கிஷோர் “இந்த மாநிலத் தேர்தல் முடிவுகளை வைத்து, உளவியல் ரீதியிலான தீர்க்கமான ஆதாயத்தைப் பெற செய்யப்பட்ட புத்திசாலித்தனமான முயற்சி; இந்தப் போலியான கருத்துருவாக்கத்தை நம்பவோ, அதில் விழவோ வேண்டாம். இந்தியாவுக்கான யுத்தம் 2024இல் நடத்தப்பட்டு முடிவெடுக்கப்படும் - மாநிலத் தேர்தல்களின் முடிவுகள் மூலம் அல்ல” என்ற கூற்றை ஆழ்ந்து சிந்தித்து தெளிவடைய வேண்டியது முக்கியம். அரசியலில் எதுவும் நிரந்தரமான நிலை இல்லை என்பதை எண்ணி, தோல்வி அடைந்தவர்கள், வெற்றி பெற்றவர்களும் தத்தம் நிலைப்பாட்டை ஆராய ஒரு வாய்ப்புதான் தேர்தல் என்பதை உணரவேண்டும். மக்களிடம் உண்மையான இறையாண்மை முடிவுகள் உள்ளன என்ற பாடம் முக்கியமானது.” என்று அறிக்கையில் வீரமணி தெரிவித்துள்ளார்.
