நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்றினை மாநில தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘பொதுவாக தேர்தல் பணியில் வேட்பாளர் சார்பாக செயல்படவும், உதவி புரியவும் வாக்குச்சாவடி முகவர் வேட்பாளரால் நியமிக்கப்படுகிறார் எனவும், அவர் வாக்குப்பதிவின்போது ஆள் மாறாட்டம் இருப்பின் வாக்குச்சாவடி தலைமை அதிகாரியின் கவனத்திற்குக் கொண்டு சென்று ஆள்மாறாட்டம் செய்வதைத் தவிர்க்க உதவலாம்.

வாக்கெடுப்பு முடிந்த பின்னர் அந்த வாக்குச்சாவடியில் பயன்படுத்தப்பட்ட வாக்குச் சீட்டுகள், வாக்குப்பதிவு கருவிகள் மற்றும் தாள் முத்திரைகள் வரிசை எண்களைக் வாக்குச்சாவடி முகவர்கள் குறித்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வாக்குப்பதிவு கருவிகள் வாக்கெடுப்புக்காகத் தயார் செய்யப்படும் முன் அவற்றுள் விதிமுறைகளின் கீழ் இருக்க வேண்டிய அடையாள அட்டைத் துண்டு தவிர, வேறு எதுவும் இல்லை என்பதைப் பார்வையிட்டு உறுதி செய்து கொள்ளலாம். 

வாக்குப்பதிவு கருவிகள் வாக்கெடுப்பு ஆரம்பிப்பதற்கு முன்பாகவும், வாக்கெடுப்பு முடிந்த பின்பும் முறையாக முத்திரை இடப்படுவதை உறுதி செய்துகொள்வதுடன் விரும்பினால் தன் முத்திரையையும் வாக்குச்சாவடி முகவர் அதில் பதிக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு வாக்காளரும் யாருக்கு வாக்களிக்கின்றனர் என்பதை நேரடியாகத் தெரிந்துகொள்வதோ, மறைமுகமாக அறிய முயற்சிப்பதோ கூடாது.

அதேநேரம் வாக்குச்சாவடி முகவர் வேட்பாளரின் பெயர் மற்றும் அவரது தேர்தல் சின்னம் அடங்கிய எதையும் வைத்து கொண்டு வாக்குச்சாவடியினுள் பணியாற்றக்கூடாது என்றும் தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. வாக்காளர்களை நேரடியாகவோ, மறைமுகமாகவோ, சைகை மூலமாகவோ அல்லது சங்தேகக் குறிகள் மூலமாகவோ எந்த ஒரு சின்னத்திலும் வாக்களிக்க வக்காளர்களைத் தூண்டக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது.