ரொம்ப எச்சரிக்கையா இருங்க.. நிலைமை மோசமா இருப்பதற்கு இதுவே உதாரணம்.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி அலர்ட்..!
கொரோனா தொற்றை பொதுமக்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்கிறார்கள். அண்மையில் ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் தொற்று பாதித்து இறந்ததை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
கொரோனா தொற்றை பொதுமக்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்கிறார்கள். அண்மையில் ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் தொற்று பாதித்து இறந்ததை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. மகாராஷ்டிரா மாநிலத்துக்கு அடுத்தப்படியாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. தினசரி பாதிப்பு 6000ஐ தாண்டியுள்ளது. எனவே தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்த போதிலும் கொரோனா பாதிப்பு உயர்ந்து வருகிறது.
இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நநடைபெற்றது. இதில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, உதயகுமார், விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழக அரசு அமைத்துள்ள கொரோனா தடுப்பு நிபுணர் குழுவினர் கூட்டத்தில் பங்கேற்றனர். அதில் முதல்வர் பழனிசாமி பேசுகையில்;- 2019-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் கொரோனா வைரஸ் தொற்று சீனாவில் கண்டு பிடிக்கப்பட்டவுடன் மாண்புமிகு அம்மாவின் அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து அதை படிப்படியாகக் குறைத்தோம். கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்குத் தேவையான மருந்துகள் கொள்முதல், மருத்துவ உபகரணங்கள், N-95 முகக்கவசம், மும்மடி முகக்கவசங்கள், PPE முழு உடல் கவசங்கள் வாங்குவதற்கு உடனடியாக பணி ஆணை வழங்கப்பட்டு, அவையெல்லாம் கொள்முதல் செய்யப்பட்டு, தேவையான அளவு கையிருப்பில் உள்ளன.
கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த மூத்த IAS அதிகாரிகள் அடங்கிய 12 ஒருங்கிணைப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டன. அதோடு, மருத்துவ வல்லுநர்கள் மற்றும் பொது சுகாதாரத் துறை வல்லுநர்கள் அடங்கிய வல்லுநர் குழு அமைக்கப்பட்டு ஒவ்வொரு மாதமும் மருத்துவர் நிபுணர் குழு கூடி ஆலோசித்து, அந்த ஆலோசனைகளுக்கு ஏற்ப அரசால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு கொரோனா வைரஸ் பரவலை படிப்படியாகக் குறைத்தோம். என்னுடைய தலைமையில் 14 முறை மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் ஆய்வுக் கூட்டங்களும், 14 முறை மருத்துவ வல்லுநர் குழுவுடன் ஆலோசனைக் கூட்டங்களும் நடத்தப்பட்டன. தலைமைச் செயலாளர் அவர்கள் தலைமையில் 14 முறை மாவட்ட ஆட்சித்தலைவர்களுடன் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டன
இந்தியா முழுவதும் படிப்படியாகக் குறைந்து வந்த கொரோனா நோய் தொற்று மார்ச் மாதத்தில் பன்மடங்கு அதிகரித்தது. குறிப்பாக, மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், பஞ்சாப் மற்றும் பல வட மாநிலங்களில் அதிகரித்த நிலையிலே காணப்பட்டு வருகிறது. மேலும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் நாளொன்றுக்கு நோய்த் தொற்று அதிகரித்துக் காணப்படுகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நாளொன்றுக்கு 400-லிருந்து 450 வரை நோய்த் தொற்று கண்டறியப்பட்டுவந்த சூழ்நிலையில் நேற்றைய தினம் சுமார் 6,618 நபர்களிடம் இந்நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது படிப்படியாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, பெருநகர சென்னை மாநகராட்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோயம்புத்தூர், திருப்பூர், திருச்சிராப்பள்ளி மற்றும் நாகப்பட்டினம்
3 போன்ற மாவட்டங்களில் இந்தத் தொற்று கூடுதலாகக் கண்டறியப்பட்டுள்ளது.
மாநில அளவில் கொரோனா மருத்துவமனைகளிலும், கொரோனா சிறப்பு மையங்களிலும் 80,284 படுக்கைகளும், இதில் ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய 32,102 படுக்கைகளும் ஐசியு வசதி கொண்ட 6,997 படுக்கைகளும், 6,517 வென்டிலேட்டர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கடந்த 10ம் தேதி வரை 37.8 லட்சம் பயனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தற்போது உயிரிழப்பு விகிதம்1.38 சதவீதமாகவும், குணமடைபவர்களின் விகிதம் 94.12 சதவீதமாகவும் உள்ளது. தற்போது, படிப்படியாக அதிகரித்து வருகிறது. அதனை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை நாம் முனைப்போடு செயல்படுத்தி வருகிறோம். தமிழ்நாடு முழுவதும், ஒரு மருத்துவர், ஒரு செவிலியர் மற்றும் ஒரு உதவியாளருடன் 2,000 அம்மா மினி கிளினிக்குகள் துவக்கப்பட்டுள்ளன. இதற்கு பொதுமக்களிடமிருந்து பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
சென்னையில் 150 முதல் 200 காய்ச்சல் முகாம்கள் செயல்பட்டு வரும் நிலையில், 400 ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். சென்னை மற்றும் பிற மாநகரப் பகுதிகளில் தற்காலிக பணியாளர்கள் மூலமாக வீடு வீடாக ஆய்வு பணிகள் மேற்கொள்ள வேண்டும். பொது இடங்களில் கூடும்போது மக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். உணவுக் கூடங்கள், தொழிற்சாலைகள், இறைச்சி கூடங்கள், மீன் மார்க்கெட், காய்கறி மார்க்கெட் போன்ற இடங்களில் மக்கள் அதிகம் கூடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
அரசு அறிவித்த வழிமுறைகளை மக்கள் தவறாமல் பின்பற்றி, ஒத்துழைப்பு நல்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். அரசு அலுவலர்கள், அரசு ஊழியர்கள் கண்டிப்பாக இரண்டு வாரத்திற்குள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். பொதுமக்கள் அனைவரும் வீட்டிற்கு அருகேயுள்ள மருத்துவமனைக்கு சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். தமிழகத்தில் போதுமான அளவு தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன என தெரிவித்துள்ளார்.