வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. கஞ்சா விற்பனையில் கொடிகட்டி பறக்கும் சென்னை?
அதனைக் கண்ட போலீசார் அவர்களை வாகனத்தை நிறுத்தும் படி கூறினர், ஆனால் அவர்கள் வாகனத்தை அங்கும் இங்குமாக திருப்பி அங்கிருந்து தப்பிக்க முயற்சி செய்தனர்.
அம்பத்தூர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் கஞ்சா கொண்டு சென்ற இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அம்பத்தூர் நசரத்பேட்டை, 400 அடி சாலை பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அந்த வழியாக சந்தேகம் படும்படியாக இருசக்கர வாகனத்தில் இருவர் வந்துள்ளனர்.
அதனைக் கண்ட போலீசார் அவர்களை வாகனத்தை நிறுத்தும் படி கூறினர், ஆனால் அவர்கள் வாகனத்தை அங்கும் இங்குமாக திருப்பி அங்கிருந்து தப்பிக்க முயற்சி செய்தனர். எதிரே இருந்த ஒரு காரின் மீது மோதி இருவரும் நிலை தடுமாறி சாலையில் விழுந்தனர். அவர்களை பின்தொடர்ந்த ரோந்து போலீசார் அவர்களை பிடிக்க முயற்சி செய்த பொழுது இருவரும் அங்கு இருந்து தப்பிக்க முயற்சி செய்து ஓடினர். ஆனால் காவல்துறையினர் அவர்களை சுற்றிவளைத்து பிடித்தனர்.
பின்னர் அவர்களை அங்கிருந்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில், ஐயப்பன்தாங்கல் பொன்னியம்மன் கோயில் தெருவை சேர்ந்த சீனு (21) மற்றும் மாங்காடு காமாட்சியம்மன் நகரை சேர்ந்த சவுந்தர் (24) என்பதும் தெரியவந்தது. மேலும் அவர்கள் வந்த இருசக்கர வாகனத்தை சோதனை செய்த போது அந்த வாகனத்தில் இருந்து 1 ½ கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இருவரையும் நசரத்பேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.