The separatists from the AIADMK will join us again - Minister KD Rajendra Balaji

விருதுநகர்

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

"அதிமுக-வில் தற்போது பிரிந்தவர்கள் மீண்டும் இணைவார்கள், அதிமுக தொடர்ந்து ஆட்சியில் நீடிக்கும். அதிமுக தொடர்ந்து ஆட்சியில் நீடிக்கும்" என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசினார்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே செவல்பட்டியில் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக் கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைப்பெற்றது.

இந்த விழாவிற்கு மாவட்டக் கூட்டுறவு சங்கத் தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு பேசியது:

"ஜெயலலிதா இல்லை, கருணாநிதி அரசியலில் இல்லை. அதனால், ஆட்சியை பிடித்து விடலாம் என்று கமல்ஹாசன் தப்புக்கணக்கு போட்டு கட்சித் தொடங்கியுள்ளார். மக்கள் பணியாற்றாமல் அரசியலில் வெற்றி பெற முடியாது என்று நடிகர்கள் விரைவில் புரிந்து கொள்வார்கள்.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவிற்கு வரலாறு உண்டு, நீண்ட காலமாக மக்கள் பணியாற்றினர். 4000 பேரை மட்டும் வைத்துக்கொண்டு கட்சி ஆரம்பித்துள்ள கமல்ஹாசன் நான்கு மாதம் கூட தாக்குப்பிடிக்க மாட்டார்.

அதிமுக-வில் சாதாரண கிளை கழகத்தில் கூட 50 பேர் உறுப்பினர்களாக இருப்பார்கள். எந்த கட்சியாலும், நடிகர்களாலும் அதிமுக-வை வீழ்த்த முடியாது.

பென்னாகரம் தேர்தலில் அதிமுக-விற்கு டெபாசிட் கூட கிடைக்கவில்லை. அதிமுக அழிந்தது என்று கூறினார்கள். ஆனால், இந்தியாவின் 3-வது பெரிய கட்சியாக அதிமுக அசுர வளர்ச்சி அடைந்தது.

அதிமுக தொண்டர்கள் எந்த சூழ்நிலையிலும் மாற்றுக்கட்சிக்கு செல்ல மாட்டார்கள். அதிமுக-வில் தற்போது பிரிந்தவர்கள் மீண்டும் இணைவார்கள், அதிமுக தொடர்ந்து ஆட்சியில் நீடிக்கும்.

ஒட்டிய வயிறையும், கிழிந்த சட்டையையும் பார்த்து தொடங்கப்பட்ட இந்த இயக்கத்தை அழிக்க நினைப்பவர்கள் அழிந்துதான் போவார்கள்.

வெம்பக்கோட்டை ஒன்றியத்தில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. செவல்பட்டி கிராமம் விருதுநகர் எம்.பி.யால் தத்தெடுக்கப்பட்டுள்ளது. செவல்பட்டியில் ரூ.60 இலட்சம் மதிப்பீட்டில் கல்யாண மண்டம் கட்டும் பணிகள் விரைவில் தொடங்கப்படும்" என்று அவர் பேசினார்.

இந்தக் கூட்டத்தில் ராதாகிருஷ்ணன் எம்.பி., தலைமை கழக பேச்சாளர் நெல்லை கபாலி, மாவட்ட பொருளாளர் ராஜவர்மன், முன்னாள் தொகுதி செயலாளர் சீனிவாசன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேஷ், அசோக் குமார், ராஜபாளையம் ஒன்றிய செயலாளர் வேல்முருகன் உள்பட பலர் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தின் இறுதியில் செவல்பட்டி ரவிக்குமார் நன்றித் தெரிவித்தார். கூட்ட ஏற்பாடுகளை வெம்பக்கோட்டை ஒன்றியச் செயலாளர் ராமராஜ், பேரவை ஒன்றிய இணைச்செயலாளர் எதிர்கோட்டை மணிகண்டன் ஆகியோர் செய்திருந்தனர்.