சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு ஜார்ஜ் கோட்டையில் காவிக்கொடி பறக்கும்.. அபரிவிதமான நம்பிக்கையில் எல்.முருகன்.!
ரஜினிகாந்த் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டாலோ அல்லது ஆன்மீக அரசியல் தொடங்கினாலோ நாங்கள் வரவேற்போம். ரஜினி முதலில் கட்சி ஆரம்பிக்கட்டும். அதற்குப் பிறகு கூட்டணி பற்றி பேசலாம்.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு ஜார்ஜ் கோட்டையில் காவிக்கொடி பறக்கும் என பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் கூறியுள்ளார்.
பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த வாரம் முழுவதும் சேவை வாரமாக அறிவித்து அதனை கொண்டாடும் விதமாக தமிழகம் முழுவதும் பாஜகவின் மாநில தலைவர் எல்.முருகன் பயணம் செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக விழுப்புரம் மாவட்டத்தில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் எல்.முருகன் பங்கேற்றார். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு ஜார்ஜ் கோட்டையில் காவிக்கொடி பறக்கும். மத்திய அரசின் திட்டங்களை அதிகளவில் பயன்படுத்திய மாநிலம் தமிழ்நாடு மட்டும் தான். மேலும், தமிழகத்தில் பாஜக தனித்து நின்றாலும் 60 இடங்களில் வெற்றிபெறும் என எல்.முருகன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேலும், பேசிய அவர் ரஜினிகாந்த் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டாலோ அல்லது ஆன்மீக அரசியல் தொடங்கினாலோ நாங்கள் வரவேற்போம். ரஜினி முதலில் கட்சி ஆரம்பிக்கட்டும். அதற்குப் பிறகு கூட்டணி பற்றி பேசலாம். பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் ஏற்பட்டுள்ள முறைகேடுகளை தமிழக அரசு முறையாக விசாரித்து வருகிறது எனத் தெரிவித்தார்.
2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடனான கூட்டணி தொடரும். எதிர்க்கும் நோக்கில் இருக்கும் திமுக, எந்த திட்டம் கொண்டு வந்தாலும் எதிர்க்கும் எனவும் தெரிவித்துள்ளார்.