உடன் பிறப்புகளுக்கு வந்த சோகச் செய்தி.. உடைந்து நொறுங்கிய ஸ்டாலின்..
ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டத்தின் பொறுப்பாளராகவும், தியாகதுருகம் ஒன்றியப் பெருந்தலைவராகவும், கழகத்தின் செயற்குழு உறுப்பினராகவும் அரும் பணியாற்றியவர்.
"மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்களின் இரங்கல் செய்தி ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் பேரூர் கழகச் செயலாளரும், கழகத்தின் மூத்த முன்னோடிகளில் ஒருவருமான திரு. மிசா. பொன். ராமகிருஷ்ணன் அவர்கள் வயது முதிர்வின் காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து வேதனையடைந்தேன்.
பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோிடத்தில் பேரன்பும், பெரும் பற்றும் கொண்டிருந்த திரு. பொன். ராமகிருஷ்ணன் அவர்கள், மிசா காலத்தில் கைதாகி ஓராண்டு சிறையில் இருந்தவர். ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டத்தின் பொறுப்பாளராகவும், தியாகதுருகம் ஒன்றியப் பெருந்தலைவராகவும், கழகத்தின் செயற்குழு உறுப்பினராகவும் அரும் பணியாற்றியவர்.
2018-ஆம் ஆண்டு விழுப்புரத்தில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் எனது கரங்களால் அவருக்கு அண்ணா விருதினை வழங்கிச் சிறப்பித்த நினைவு இன்னும் என் நெஞ்சை விட்டு அகலவில்லை.அத்தகு சிறப்புடைய திரு. மிசா. பொன். ராமகிருஷ்ணன் அவர்களுடைய மறைவு கழகத்திற்குப் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், கழகத் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.