The power to change the regime is only for DMK
ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் ஆற்றல் திமுகவுக்கு மட்டுமே உள்ளது எனவும் டிடிவி தினகரன் வெற்றிக்கு திமுக உதவியதாக அவதூறு பரப்புவோர் அவமானப்படுவது நிச்சயம் என்றும் திமுக செயல் தலைவர் மு. க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கிய டிடிவி தினகரன் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
இதில் திமுக வேட்பாளர் மருதுகணேஷ் டெபாசிட் கூட வாங்காமல் தோல்வியுற்றார். இதையடுத்து அதிமுக தரப்பு டிடிவி தினகரனுக்கு மறைமுகமாக திமுக உதவி வருவதாக கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில், திமுக செயல்தலைவர் ஸ்டாலின் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ஆர்கேநகர் இடைத் தேர்தலில் ஜனநாயகம் புதைக்கப்பட்டு பணநாயகம் கோலோச்சியது என்றும் பணநாயகத்துக்கு ஆர்.கே.நகர் தொகுதி பலியானதாகவும் தெரிவித்துள்ளார்.
அதிமுக இருதரப்பு வேட்பாளர்களும் கோடிக்கணக்கில் பணத்தைக் கொட்டி ஜனநாயகத்தை விலைபேசினார்கள் எனவும் ஆர்கேநகரில் திமுக வேட்பாளர் மருதுகணேஷ் 960 தெருக்களிலும் நடந்து சென்று பிரச்சாரம் செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
திமுக பிரச்சாரத்தின் பலனைத் தடுக்க கோடிக்கணக்கில் பணம் கொட்டப்பட்டது என்றும் உண்மைகளை மறைத்து விட்டு , யாருக்கோ திமுக உதவியதாக கூறியது பொய் பிரச்சாரம் என்றும் தெரிவித்துள்ளார்.
யாரையும் மறைமுகமாக , ரகசியமாக ஆதரிக்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது என்றும் ஊழல் கடலில் மூழ்கி கிடப்பவர்களால் ஆட்சி மாற்றம் வரும் என்று நினைப்பது விஷமப் பிரச்சாரம் என்றும் தெரிவித்துள்ளார்.
