ராமதாஸ் நடத்திய ரகசிய கூட்டம்: மொபைலை பிடுங்கிவிட்டு, தகவலை உள்ளே இறக்கிய டாக்டரய்யா.
தமிழகத்தின் சிறு கட்சிகளான கம்யூனிஸ்டுகள், விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க. போன்றவை அடுத்த சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது வின்னிங் கூட்டணியில் சேர்ந்து சில பல எம்.எல்.ஏ.க்களை சட்டசபைக்குள் தள்ளிவிட வேண்டும் என்கிற முனைப்பில் உள்ளன. ஆனால் பா.ம.க.வோ ’2021 தேர்தல் மூலம் அன்புமணியை முதல்வராக்கியே தீருவது’ எனும் பெரும் கனவில் உள்ளது.
அன்பு மணியே அடுத்த முதல்வர் என மக்களை பேச வைப்பதற்காக ஒரு அலையை உருவாக்க இருக்கிறார்களாம். இதை எப்படி நிகழ்த்துவது என்று கடந்த 28-ம் தேதி புதுச்சேரியில் ஒரு ரகசிய கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தாராம் ராமதாஸ். அன்பு மணிக்காக ஏற்பாடான இந்த கூட்டத்தில் அவர் கலந்து கொள்ளவில்லை. மாறாக அவரது மொத்த குடும்பமும் மேடையில் இருந்திருகிறது.
புதுச்சேரியிலுள்ள ‘பால் பொறியியல் கல்லூரி’யில் இதை நடத்தியிருக்கிறார்கள். கல்லூரி ஆடிட்டோரியத்தில் ‘தகவல் தொழில்நுட்ப ஆலோசனைக் கூட்டம்.’ என்று பேனர் கட்டிவிட்டு உள்ளே அன்புமணியை சி.எம். ஆக்குவதற்காக திட்டங்களை கட்டு கட்டென கட்டியிருக்கிறார்கள்.
இந்த ரகசிய கூட்டத்தில் பிரதானமாக பேசிய ராமதாஸ் கட்சி நிர்வாகிகளுக்கு வழங்கிய ஹைடெக் அட்வைஸின் ஹைலைட் பாயிண்டுகள் இதோ...
* கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மோடி அலை எழுந்தது போல் வரும் சட்டமன்ற தேர்தலில் அன்புமணி அலை எழ வேண்டும்.
* இதை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளுடையது. மாவட்ட செயலாளர்கள் அத்தனை பேருக்கும் தேர்தலில் சீட் உண்டு.
* ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற இணைய தளங்களை நிர்வாகிகள் தினமும் பார்க்க வேண்டும். ஒவ்வொரு நாளும் பா.ம.க. நடத்தும் நிகழ்ச்சிகள் ஃபேஸ்புக்கில் ஏற்றப்பட வேண்டும்.
* மக்கள் கூடும் இடங்களில் ‘அடுத்த முதல்வர் அன்புமணியே’ எனும் பேச்சை விதைக்க வேண்டும்.
* இதுவரை நடந்த தேர்தல்களில் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. ஆகியவற்றை தூக்கி சுமந்த நாம், இனி கூட்டணியே இல்லாமல் தனித்தே நிற்க போகிறோம்.
- என்பதே.
கூட்டம் துவங்கும் முன்பாக நிர்வாகிகளின் மொபைல் போன் சுவிட் ஆஃப் செய்யப்பட்டு ஃபிளையிங் ஸ்குவார்டு டீமிடம் ஒப்படைக்கப்பட்டதாம்.
இப்பவே கண்ணை கட்டுதே!...