கைப்புள்ள சீமானுக்கு ஆர்.எஸ்.எஸ் கொடுத்த திட்டம் இஸ்லாமியர்களை தனிமைப்படுத்துவதே... வரிந்து கட்டும் வன்னியரசு!
எப்படியாவது இசுலாமியர்களை தனிமைப்படுத்துவதே பாஜக சங்பரிவாரக் கும்பலின் செயல்திட்டம். கொடுத்த வேலையை கச்சிதமாக செய்கிறார் சீமான்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசுவின், அண்மைக்கால ட்விட்டர் பதிவுகளில் நாம் தமிழர் கட்சியின் மீதான விமர்சனம் வெளிப்பட்டு வருகிறது. வன்னி அரசு வெளியிட்ட பதிவில், ` தேசிய இனங்கள் எழுச்சி பெற்றுவிடக்கூடாது என்பதற்காகவே மதவழிப்படுத்த பா.ஜ.க முனைகிறது. அதற்கு போலித் தமிழ்த்தேசியம் பேசுவோர் உதவுகிறார்கள்' எனக் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், ` ஆரியர்கள் நம் நாட்டுக்கு வருவதற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சிறந்த நாகரிக வாழ்க்கையை மேற்கொண்டு, செம்மை நெறியில் ஒழுகி வந்த தமிழ்மக்களுக்கு இடைப்பட்ட காலத்தில் கொண்டு வந்து புகுத்தப்பட்ட இந்துமதம், எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல' எனக் கூறி, `சீமான் வகையறாக்களுக்கு' எனப் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், '’இசுலாமியர் குறித்து தந்தை பெரியார் சொல்லாதவற்றை சொன்னதாக ஆர்.எஸ்.எஸ் அவதூறு பரப்புவதை விட, அவ்வியக்கத்தின் கைப்புள்ள தான் அதிகம் செய்து வருகிறார். எப்படியாவது இசுலாமியர்களை தனிமைப்படுத்துவதே பாஜக சங்பரிவாரக் கும்பலின் செயல்திட்டம். கொடுத்த வேலையை கச்சிதமாக செய்கிறார் சீமான்’’ எனப்பதிவிட்டுள்ளார் வன்னியரசு.
சீமானுடன் ஏன் இந்த மோதல் போக்கு? என்பது குறித்து வன்னியரசு கூறுகையில், ‘’சீமானின் பேச்சுகள் அனைத்தும் தமிழ்த் தேசியத்துக்கு எதிராக உள்ளன. நாம் தமிழர் என்ற கட்சியைத் தொடங்கும்போது இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், கரு.பழனியப்பன் உள்ளிட்ட பலர் சீமானுடன் இருந்தனர். தற்போது அவர்கள் யாரும் இவருடன் இல்லை. அவருடன் அனைத்து மேடைகளிலும் நின்ற அமீர், அவரைவிட்டு விலகிவிட்டார். காரணம், `இஸ்லாமியர்கள் தமிழர்கள் இல்லை' என்று சீமான் பேசிய பேச்சுதான்.
தொடக்கத்தில் கொளத்தூர் மணி, கோவை ராமகிருஷ்ணன் ஆகியோருடன் பெரியாரிய மேடைகளில் அவர் இருந்தார். இப்போது அவர்களும் இவருடன் இல்லை. தமிழ்த்தேசிய தளத்தில் உள்ள பொழிலன், சுப.உதயகுமார் போன்றவர்களும் அவருடன் இல்லை. இதனைக் குறிப்பிடக் காரணம், `தமிழ்நாட்டில் நம்பிக்கையான அரசியலை முன்னெடுப்பார்' என்ற அடிப்படையில்தான் சீமானுக்கு இவர்கள் ஆதரவு கொடுத்தனர். அவர் பேசும் அரசியல் என்பது இதற்கு முன்னர் நாங்களும் நெடுமாறன் போன்றவர்களும் பேசியவைதான்.
தனி நபர் என்ற அடிப்படையில் அவரோடு எங்களுக்கு எந்தவித முரண்பாடும் இல்லை. அவர் இயக்குநராக இருந்தபோது எனக்கும் நண்பர்தான். அவர் முன்னெடுக்கும் அரசியலுக்கும் எங்களுக்கும் ஏராளமான முரண்பாடுகள் உள்ளன. சங்பரிவார் இயக்கங்களுக்கு துணை போகின்ற, ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு ஆள் பிடித்துவிடுகின்ற வேலையை நாம் தமிழர் கட்சி செய்கிறது என்பதில் எங்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது" என்கிறார்.