எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் செய்த நல்ல விஷயம் என்றால், அது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தவற்றை உடனடியாகச் செய்ததுதான் என்று திமுக துணைப் பொதுச்செயலாளரும் நீலகிரி எம்.பி.யுமான ஆ.ராசா தெரிவித்தார். 

திமுக கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம் அவிநாசியின் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா பங்கேற்று பேசினார். “அரசியல் மாற்றத்தை நோக்கி தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் சென்றுகொண்டிருக்கிறது. அவிநாசியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அதியமான் மீது வேண்டுமென்றே திட்டமிட்டு, அவதூறு பரப்பி சாதிவெறியை தூண்டி வெற்றியை பறிக்கலாம் என எண்ணுகிறார்கள். உண்மையில் அவிநாசி சட்டப்பேரவைத் தொகுதி ஒரு நல்ல எம்.எல்.ஏ.வை பெறப்போகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred


திமுக ஆட்சிக்கு வந்தவுடன் இந்தத் தொகுதியின் தேவைகளை அனைத்தையும் அவிநாசி எம்.எல்.ஏ.வும் இத்தொகுதியில் எம்.பி.யுமான நானும் சேர்ந்து நிச்சயமாக நிறைவேற்றுவோம். 23 வயதில் மிசாவை எதிர்த்து சிறைக்கு சென்றவர்தான் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். திமுகவில் கட்சி பிரதிநிதியாக தொடங்கி பொதுக்குழு உறுப்பினர், செயற்குழு உறுப்பினர் எனப் படிப்படியாக இளைஞரணி செயலாளர், துணை பொதுச் செயலாளர், பொருளாளர், செயல் தலைவர், கட்சியின் தலைவர் என உழைப்பால் உழைப்பால் உயர்ந்தவர் ஸ்டாலின். தற்போது மக்களாட்சியை தந்திட தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்க உள்ளார்.
ஆனால், எடப்பாடி பழனிசாமியோ எம்எல்ஏக்களை கூவத்தூர் பங்களாவில் அடைத்துவைத்து சாராயத்தை ஊற்றிக் கொடுத்து முதல்வரானார். இதை நாம் சொல்லவில்லை. அதிமுக அமைச்சர் சண்முகநாதன் சொன்னார். ஜெயலலிதா ஆட்சியை நடத்துவதாகச் சொல்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. ஜெயலலிதாவுக்கு இரு முகங்கள் உண்டு, ஒன்று துணிச்சல்மிக்க தமிழக உரிமைகளை விட்டுக்கொடுக்காத முகம். ஆனால், பழனிசாமியோ நீட் தேர்வு, உதய் மின் திட்டம் என மாநில உரிமைகளை விட்டுக்கொடுத்தவர்.
ஜெயலலிதாவின் இன்னொரு முகம், ஊழல் செய்தவர் என்று உச்ச நீதிமன்றமே தீர்ப்பளித்து தண்டனை வழங்கிய அந்த முகம். பழனிசாமியும் அதுபோலத்தான் ஆட்சியை நடத்திவருகிறார். ஊழல் செய்து பணம் ஈட்டுவதிலேயே குறியாக உள்ளார்கள். எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் செய்த நல்ல விஷயம் என்றால், அது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தவற்றை உடனடியாகச் செய்ததுதான். எனவே, மதச்சார்பற்ற ஊழலற்ற ஆட்சி அமைய வேண்டுமென்றால் உதயசூரியனுக்கு வாக்களியுங்கள்” என ஆ.ராசா பேசினார்.