திமுகவைப் பற்றி பேசினாதான் அவருக்கு விளம்பரம்... அண்ணாமலையைத் தெறிக்கவிட்ட சேகர்பாபு.!
விளம்பரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக திமுக ஆட்சியை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சிப்பதாக தமிழக அமைச்சர் பி.கே. சேகர்பாபு தெரிவித்தார்.
திருச்செந்தூர் கோயில் வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “திருச்செந்தூர் கோயில் ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கொரு முறை குடமுழுக்கு நடத்த வேண்டும். கடந்த மாதத்துடன் குடமுழுக்குத் தேதி நிறைவுபெற்றிருக்கிறது. குடமுழுக்கு மற்றும் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவது தொடர்பாகத்தான் இன்று கூட்டம் நடைபெற்றது. இதில் முதல்வர் இறுதி முடிவு எடுத்தபின் அதற்குண்டான பணிகள் தொடங்கும்.” என்று சேகர்பாபு தெரிவித்தார்.
கோயில் நிலங்கள் பராமரிப்பில் நிலவும் அலட்சியம் குறித்து சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்த கண்டனம் குறித்த கேள்விக்கு பதிலளித்த சேகர்பாபு, “நீதிமன்றத்தின் கருத்தில் ரொம்ப உள்ளே நுழையக் கூடாது. நீதிபதிகளின் கருத்துகளை ஏற்று அவர்கள் திருப்தியடையும் அளவு எங்களுடைய பணி தொடரும். முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் இந்துசமய அறநிலையத்துறையைப் பொற்காலமாக மாற்றுவதற்கான எல்லா நடவடிக்கைகளை எடுப்போம்” என்று தெரிவித்தார்.
திமுக ஆட்சிக்கு வந்து 70 நாட்களில் தேர்தல் வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை என்ற விமர்சனத்துக்கு பதிலளித்த சேகர்பாபு, “சில நேரத்தில் ஒரு சிலரைப் பற்றிக் கூறினால்தான் அவர்களுக்கு விளம்பரம் கிடைக்கும்” எனப் பதிலளித்தார்.