தீர்ப்புகளைக் கிடப்பிலிட்டுத் திரியலாமா? மோடி சர்க்கார் முன்னின்று சிதைக்கலாமா? தாறுமாறாக தாளித்து தள்ளிய நமது அம்மா!
ஏப்ரல் 13ஆம் தேதி, அதாவது பிரதமர் மோடி தமிழகத்துக்கு வந்து சென்ற மறுநாள், ‘நமது அம்மா’ நாளிதழில் ‘நெருப்பாகும் வெறுப்பு’ என்ற தலைப்பில் மத்திய பாஜக அரசை அதிமுகவின் அதிகாரபூர்வ நாளேடான நமது அம்மா கேள்வி எழுப்பியிருந்தது.
காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என போராட்டம் நடந்ததை அடுத்து, கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி செய்தி வெளியிட்ட அதிமுக நாளேடு நமது அம்மா, "எத்தனை போராட்டங்கள் நடத்தினாலும் அதிமுக, பாஜக உறவை யாராலும் பிரிக்க முடியாது. மத்திய, மாநில அரசுகளின் ஒற்றுமையை எவராலும் சீர்குலைக்க முடியாது.
இந்த உறவைக் கெடுக்க நினைக்கும் திமுகவின் திட்டம் பலிக்காது. இந்திய அரசியலில் அதிமுகவும், பாஜகவும் இரட்டைக் குழல் துப்பாக்கியாய் செயல்படுவதற்கான அறிகுறிகள் தெரியத் தொடங்கிவிட்டன. அதற்கான பாதை தெளிவாக இருக்கிறது. பயணத் திட்டத்தை 2 கட்சிகளின் தலைமைதான் முடிவு செய்ய வேண்டும். அதுவே காலத்தின் கட்டாயமாக இருக்கும்" என்று கூறியிருந்தது.
உச்ச நீதிமன்றத்தில் நேற்று காவிரி வழக்கு தொடர்பான விசாரணையின் போது கர்நாடகத் தேர்தலைக் காரணம் காட்டிக் காவிரி குறித்த வரைவுத் திட்டத்தினைத் தாக்கல் செய்யக் கால அவகாசம் கோரியது மத்திய அரசு, அதற்கு மறுப்புத் தெரிவித்த உச்ச நீதிமன்றம், காவிரிப் பிரச்சினை தொடர்பாக மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகளை வரும் 8ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், இன்று அதிமுகவின் அதிகாரபூர்வ நாளேடான நமது அம்மாவில் மத்திய அரசை விமர்சித்து 'அவகாசமா அவமானமா' என்ற தலைப்பில் கவிதை வெளியாகியுள்ளது. அந்தக் கவிதையில், “வாக்குகளை மனதில் வைத்து வஞ்சகம் செய்யலாமா?” என்று மத்திய அரசுக்குக் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
“தேர்தல் முடிவை நெஞ்சில் வைத்துத் தீர்ப்புகளைக் கிடப்பிலிட்டுத் திரியலாமா?” என்றும் “நடை கூட்டும் தாயே நச்சுக் கலப்பு செய்யலாமா, இந்தியாவின் ஒற்றுமையை மோடி சர்க்கார் முன்னின்று சிதைக்கலாமா?” என தாறுமாறாக தாளித்து தள்ளியுள்ளது நமது அம்மா நாளேடு.