இரவு நேர ஊரடங்கு தமிழகம், புதுச்சேரியில்அமலுக்கு வந்தது... இரவில் வெறிச்சோடிய நகரங்கள்..!
தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க இரவு நேர ஊரடங்கு இன்று இரவு 10 மணி முதல் அமலானது.
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஒரு நாளில் 11 ஆயிரத்தை எட்டியுள்ளது. சென்னையில் மட்டும் பாதிப்பு 3,500ஐ கடந்துள்ளது. இதனையடுத்து கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.
இதன்படி இன்று இரவு 10 மணிக்கு இரவு அமலுக்கு வந்தது. இதனையடுத்து கடைகள் அனைத்தும் இரவு 10 மணிக்கு முன்பாக தமிழகத்தில் அடைக்கப்பட்டன. வேலைக்கு சென்றவர்கள் 10 மணிக்குள் வீடு திரும்பினார்கள். போக்குவரத்து சேவைகளும் 10 மணிக்கு முன்பாக நிறுத்தப்பட்டன. இதனால் சாலைகள் வெறிச்சோடின. இந்த ஊரடங்கு விடியற்காலை 4 மணி வரை அமலில் இருக்கும். இந்த ஊரடங்கில் இரவு வேளையில் போக்குவரத்து சேவைகள் மட்டுமின்றை பிற சேவைகளும் தடை செய்யப்பட்டுள்ளன. அவசர சேவைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.
மறு உத்தரவு வரும் வரை தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும். தமிழகத்தைப்போலவே புதுச்சேரியிலும் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது. அங்கு இரவு 10 மணி முதல் விடியற்காலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும்.