the name of religion culture morality is not terrorizing than what is it

நடிகர் கமல் ஹாசன் , இந்து தீவிரவாதம் இன்னும் இந்தியாவில் இருக்கிறது என்று கூறிய கருத்து பல்வேறு சர்ச்சைகளையும், அவர் மீது வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவரின் கருத்துக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இந்து தீவிரவாதம்

நடிகர் கமல் ஹாசன் ‘ஆனந்த விகடன்’ வாரபத்திரிகையில் ‘என்னுள் மையம் கொண்டபுயல்’ என்ற தொடரை எழுதி வருகிறார். அதில் இந்த வாரத்தில் குறிப்பிட்டுள்ளதில், “ இந்து தீவிரவாதம் இல்லை என கூறமுடியாது. முன்பு எல்லாம் இந்து வலதுசாரியினர் மற்ற மதத்தைச் சார்ந்தவர்களுடன் வன்முறையில் ஈடுபடாமல், வாதங்கள் மூலமே எதிராளியை வன்முறையில் ஈடுபட வைத்தனர்.

ஆனால், இந்த பழைய சூழ்ச்சி தோற்க ஆரம்பித்ததும், யுக்தியால் முடியாததை சக்தியால் செய்யத் தொடங்கி, இந்து வலதுசாரியினரும் வன்முறையில் ஈடுபட ஆரம்பித்துவிட்டனர். எங்கே ஓர் இந்துத் தீவிரவாதியைக் காட்டுங்கள் என்ற சவாலை இனி அவர்கள் விட முடியாது என்று அவர் எழுதியிருந்தார்.

வழக்கு

இதற்கு பா.ஜனதா கட்சித் தலைவர்கள் பலர் கடுமையான கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசி நகரில் கமல் ஹாசன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிரகாஷ்ராஜ் ஆதரவு

இந்நிலையில், கர்நாடகாவில் இந்து வலதுசாரிகளுக்கு எதிராக எழுத்தி வந்த மூத்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் மர்ம நபர்களால் கடந்த செப்டம்பர் மாதம் கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து நடிகர் பிரகாஷ் ராஜ் கடுமையான கருத்துக்களை ஆளும் பா.ஜனதா கட்சி மீதும், தலைவர்கள் மீதும் தெரிவித்து வருகிறார். இப்போது கமல்ஹாசனுக்கும் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதற்கு பெயர் என்ன?

நடிகர் பிரகாஷ் ராஜ் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது - மதத்தின் பெயராலும் கலாச்சாரத்தின் பெயராலும், ஒழுக்கத்தின் பெயராலும் அச்சத்தை மக்களிடத்தில் புகுத்துவதற்கு பெயர் தீவிரவாதம் இல்லை என்றால் அதற்கு பெயர் என்ன?.
எது தீவிரவாதம்?

Scroll to load tweet…

என் நாட்டின் ஒருவரை தரக்குறைவாக பேசுவதும், இளம் காதல் ஜோடிகளை தெருக்களில் கண்டால் தாக்குவது போன்றவை ஒழுக்கத்தின் அடிப்படையில் செய்யப்படுகிறது இது தீவிரவாதம் இல்லையா?.

பசுவதையை தடுக்கும் வகையில் சிலர் சட்டத்தை கையில் எடுத்து, அப்பாவி மக்களை தாக்கி, கொலை செய்கிறார்கள் இது தீவிரவாதம் இல்லையா?. தரக்குறைவாக பேசி இழிவுபடுத்துவது, எதிர்கருத்து தெரிவித்தால் மிரட்டி, கருத்துக்கூறியவரின் குரலை ஒடுக்குவது தீவிரவாதம் இல்லையா?. அப்போ, தீவிரவாதம் என்றால் என்ன?
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.