வீட்டுச்சாவியை பிடுங்கிய அமைச்சர்... எசகுபிசகாக மாட்டிக்கொண்ட திமுக எம்.பி..!
தேர்தலின்போது அவர்களுக்கு கேட்கக் கேட்க அள்ளிக் கொடுத்தேன். அப்போது இருகைகளையும் எட்டும்வரைக்கும் நீட்டியவர்கள், இப்போது சங்கடமான காலத்தில் ஒரு ஆதரவுக்காகக்கூட கைகொடுக்க மறுக்கிறார்களே
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பணிக்கன் குப்பத்தில் திமுக எம்.பி. ரமேஷுக்கு சொந்தமாக முந்திரி கம்பெனி உள்ளது. அங்கு பணியாற்றி வந்த கோவிந்தராஜன் என்பவர் அடிக்கடி முந்திரியை திருடியதாக கூறப்படுகிறது. இதை அறிந்த கோவிந்தராஜ் தாக்கப்பட்டதாகவும் அதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டதாக கோவிந்தராஜனின் குடும்பத்தினருக்கு கடந்த செப்டம்பர் 19 அன்று முந்திரி கம்பெனியில் இருந்து தகவல் வந்துள்ளது. ஆனால், தனது தந்தை தற்கொலை செய்துகொள்ளவில்லை என்று அடித்துக் கொல்லப்பட்டதாக கோவிந்தராஜனின் மகன் போலீஸில் புகார் அளித்தார்.
இதுதொடர்பாக பாமக சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து டிஜிபி சைலேந்திர பாபுவின் உத்தரவின் பேரில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். கோவிந்தராஜ் தாக்கப்பட்டபோது நேரில் பார்த்த ஊழியர்களிடம் விசாரணை நடந்தது. இந்த விசாரணையில், கோவிந்தராஜ் முந்திரி திருடியது தெரிய வந்ததால் அக்கம்பெனியின் உரிமையாளரும் திமுக எம்.பியுமான ரமேஷ், அங்கு பணி புரியும் சிலருடன் சேர்ந்து கடுமையாகத் தாக்கியது தெரிய வந்தது.
அவரை காவல் நிலையத்தில் ஒப்படைக்க அழைத்து சென்றபோது, உடலில் காயங்கள் இருந்ததால் கோவிந்தராஜனை கைது செய்ய போலீசார் மறுத்துவிட்டனர். அதே வேளையில் அவரை மருத்துவமனையில் சேர்க்கவும் போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், கோவிந்தராஜனை மீண்டும் முந்திரி கம்பெனிக்கே அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவருக்கு விஷம் கொடுத்து பிறகு மருத்துவமனையில் சேர்த்ததும் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.
இதனையடுத்து கோவிந்தராஜன் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தபோது தொடர்பான சிசிடிவி கேமரா காட்சிகளையும் சிபிசிஐடி போலீசார் கைப்பற்றினர். மேலும், திமுக எம்.பி ரமேஷ் உள்ளிட்ட 6 பேர் மீது கொலை, கூட்டுசதி உள்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவானது. இந்த வழக்கில் நடராஜன், கந்தவேல், அல்லாபிச்சை, வினோத், சுந்தராஜன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதனிடையே, தலைமறைவாக இருந்து வந்த திமுக எம்.பி.ரமேஷ் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.
கொலைவழக்கில் கைதான கடலூர் திமுக எம்பியான ரமேஷ் ஜாமீனில் வெளிவந்துவிட்டார். வந்தவரை, மாவட்டத்தில் உள்ள கட்சிக்காரர்கள் தொடங்கி அமைச்சர்கள் வரை யாரும் நேரில்வந்து பார்க்கவில்லையாம், அவ்வளவு ஏன்? அலைபேசியில்கூட அழைக்கவில்லையாம். “தேர்தலின்போது அவர்களுக்கு கேட்கக் கேட்க அள்ளிக் கொடுத்தேன். அப்போது இருகைகளையும் எட்டும்வரைக்கும் நீட்டியவர்கள், இப்போது சங்கடமான காலத்தில் ஒரு ஆதரவுக்காகக்கூட கைகொடுக்க மறுக்கிறார்களே” என்று சிலரது பெயர்களைச் சொல்லியே நெருக்கமானவர்களிடம் புலம்புகிறாராம் ரமேஷ்.
இதையே தங்களுக்குக் கிடைத்த வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டு சொந்தக் கட்சிக்காரர்கள் அவரைப் போட்டுப் பார்க்கிறார்களாம். நெய்வேலியை உள்ளடக்கிய எம்பி மற்றும் எம்எல்ஏக்களுக்கு என்எல்சி நிறுவன குடியிருப்புப் பகுதியில் வீடு ஒதுக்கித் தருவது வழக்கம். ரமேஷுக்கும் அப்படி ஒரு வீடு கொடுக்கப்பட்டது. அந்த வீட்டை ரமேஷ் பயன்படுத்தாமல் வைத்திருந்தார். இந்நிலையில், “அந்த வீட்டின் சாவியை அண்ணன் வாங்கிவரச் சொன்னார்” என்று, அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தின் உதவியாளர் பாலமுருகன் வாங்கிச் சென்றாராம். அத்தோடு வீட்டுச் சாவி அங்கிருந்து திரும்பவில்லையாம். ”கோடீஸ்வரனான எனக்கு அந்த வீடு ஒண்ணும் பெரிய விஷயமில்லை. ஆனா, பெரிய மனுசனா அடையாளம் காட்டிக்கிற சிலபேரு, ஏன் இப்படி அல்பத்தனமா இருக்காங்கன்னு தெரியலையே” என்று நெருக்கமானவர்களிடம் புலம்பிக் கொண்டிருக்கிறாராம் ரமேஷ்.