சபைக்குள் வந்ததும் கேள்வி கேட்பதா ? விஜயதாரணியை கண்டித்த அப்பாவு...! அதிர்ச்சியில் காங்கிரஸ்..
தமிழக சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்று வரும் நிலையில் கேள்வி கேட்பதற்கு அனுமதி வழங்குமாறு காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினர் விஜயதாரணி, சபாநாயகர் அப்பாவுவிடம் தொடர்ந்து வலியுறுத்தியதற்கு சபாநாயகர் கண்டித்தார். இதனால் சட்டப்பேரவையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
கேள்வி கேட்க அனுமதி கேட்ட விஜயதாரணி
சட்டப்பேரவையில் இன்றைய தினம் நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித் துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. முன்னதாக கேள்வி நேரத்தில் தங்கள் தொகுதி சார்ந்த பிரச்சனைகள் தொடர்பான சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வந்தனர். அப்போது சபாநாயகர் இதுவரை சட்ட பேரவையில் கேள்வி கேட்காத உறுப்பினர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வந்தார். அப்போது காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினர் விஜயதாரணி தனக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என தொடர்ந்து சபாநாயகர் அப்பாவுவிடம் வலியுறுத்தி வந்தார்.
விஜயதாரணியை கண்டித்த அப்பாவு
இந்தநிலையில் சபாநாயகர் அப்பாவு, காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினர் விஜயதாரணிக்கு இதுவரை 4 துணைக் கேள்விகள் கேட்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், சட்டப்பேரவையில் ஒரு கேள்வி கூட கேட்காமல் நிறைய சட்டமன்ற உறுப்பினர்கள் இருப்பதாக தெரிவித்தார். அவர்களுக்கு பார்த்து பார்த்து வாய்ப்பு வழங்கி வருவதாக தெரிவித்தார். மேலும் சட்டபேரவைக்கு சீனியரான நீங்கள் சட்ட சபைக்கு காலை 10.45 மணிக்கு வந்துவிட்டு வந்தவுடன் கேள்வி கேட்க வேண்டும் என நினைப்பது எப்படி என சபாநாயகர் அப்பாவு கேள்வி எழுப்பினார். மேலும் இருக்கையில் இருந்து கொண்டு பேசுவது நல்ல பழக்கமில்லை எனவும் கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த காங்கிரஸ் உறுப்பினர் விஜயதாரணி மீண்டும் தனது இருக்கையில் இருந்து பேச முற்பட்டார். இதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்தால் ஏமாற்றத்தோடு இருக்கையில் அமர்ந்தார்.