டெல்லி கொடுத்த நம்பிக்கை..! காத்திருக்கும் குஷ்பு..! புதிய பதவி என்ன?
ஆளுநர் நியமனத்திற்கு எதிராக குரல் கொடுத்து குஷ்பு மறுபடியும் பரபரப்பை கிளப்பினார். இதற்கிடையே பாஜகவில் இருந்து விலகி குஷ்பு திமுகவில் இணைய உள்ளதாக பேசப்பட்டது. ஆனால் அதனை பொய்யாக்கும் வகையில் குஷ்பு திடீரென டெல்லி சென்று திரும்பினார்.
சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தாலும் பாஜகவில் பொறுப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் குஷ்புவுக்கு முக்கிய பதவி ஒன்றை வழங்க உறுதி அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சட்டமன்ற தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்னர் திடீரென டெல்லி சென்ற குஷ்பு அங்கு பாஜக தலைவர் நட்டா முன்னிலையில் அந்த கட்சியில் இணைந்தார். அத்துடன் தமிழகத்தில் பாஜகவின் முகமாக வெகு சில நாட்களிலேயே குஷ்பு முன்னுக்கு வந்தார். அதிலும் குறிப்பாக திருமாவளவனுக்கு எதிராக குஷ்பு மேற்கொண்ட பிரச்சாரம் அவரை பாஜகவில் அடுத்த நிலைக்கு கொண்டு சென்றது. காங்கிரசை போல் இல்லாமல் பாஜகவில் குஷ்புவுக்கு துவக்கத்தில் நல்ல முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. அப்போது பாஜக தமிழக தலைவராக இருந்த எல்.முருகன் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் குஷ்புவுக்கு அழைப்பு விடுத்து வந்தார்.
இதனிடயே சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட குஷ்பு ஆயத்தமாகினார். தேர்தல் அறிவிப்பிற்கு முன்னரே அந்த தொகுதியில் தேர்தல் பணிகளை தொடங்கினார் குஷ்பு. காரணம் அந்த தொகுதியில் கணிசமாக உள்ள முஸ்லீம வாக்குகள். குஷ்பு திருமணத்திற்கு பிறகு இந்துவாக மாறினாலும் அவர் பிறப்பால் முஸ்லீம். அத்துடன் பெண் என்பதால் முஸ்லீம் பெண்களின் வாக்குகளை குறி வைத்து பாஜகவும் அவரை சேப்பாக்கத்தில் களம் இறக்க திட்டமிட்டது. ஆனால் கடைசி நேரத்தில் சேப்பாக்கம் தொகுதியை பாமகவிற்கு ஒதுக்கியது அதிமுக.
இதனால் ஆயிரம் விளக்கு தொகுதியில் குஷ்பு வேட்பாளராக களம் இறங்கினார். அங்கு திமுக வேட்பாளர் டாக்டர் எழிலனிடம் குஷ்பு படு தோல்வி அடைந்தார். இதனை அடுத்து அரசியல் நடவடிக்கைகளில் அவரை அடிக்கடி பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது. பிறகு திடீரென ஆளுநர் நியமனத்திற்கு எதிராக குரல் கொடுத்து குஷ்பு மறுபடியும் பரபரப்பை கிளப்பினார். இதற்கிடையே பாஜகவில் இருந்து விலகி குஷ்பு திமுகவில் இணைய உள்ளதாக பேசப்பட்டது. ஆனால் அதனை பொய்யாக்கும் வகையில் குஷ்பு திடீரென டெல்லி சென்று திரும்பினார்.
சுமார் மூன்று நாட்கள் வரை டெல்லியில் முகாமிட்டிருந்த குஷ்பு அங்கு பாஜக மூத்த தலைவர்கள் உள்ளிட்டோரை சந்தித்தார். அப்போது அவருக்கு தேசிய மகளிர் ஆணையத் தலைவர் பதவி கொடுப்பதாக வாக்குறுதி அளித்ததாக கூறப்பட்டது. இதனை அடுத்தே மறுபடியும் சென்னை வந்த பிறகு பாஜக செயல்பாடுகளில் குஷ்பு தீவிரம் காட்டி வந்தார். இதற்கிடையே வாக்குறுதி அளிக்கப்பட்டே சுமார் ஒரு மாதம் ஆன நிலையில் எப்போது அறிவிப்பு வரும் என காத்திருக்கத் தொடங்கியுள்ளார் குஷ்பு.
அதே சமயம் பாஜகவில் சமீப காலமாக அதிலும் குறிப்பாக தமிழக பாஜகவில் கட்சியில் புதிதாக சேர்பவர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பதாக புகார்கள் எழுந்துள்ளனர். எல்.முருகன் திடீரென பாஜகவின் தலைவராக்கப்பட்டார், இதே போல் பாஜகவில் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இணைந்த நயினால் நாகேந்திரன் பாஜக சட்டமன்ற குழு தலைவரானார். இதே போல் கடந்த ஆண்டு கட்சியில் சேர்ந்த அண்ணாமலை தற்போது பாஜக மாநிலத் தலைவராகியிருக்கிறார். இந்த வகையில் கட்சியில் சேர்ந்த சில மாதங்களே ஆன குஷ்புவுக்கு உயர் பதவியா? என்று இப்போதே கமலாலயத்தில் அதிருப்தி குரல்கள் கேட்கத் தொடங்கியுள்ளன.