பாஜகவை எதிர்த்து வலுவான எதிர்கட்சிகள் அடங்கிய கூட்டணியை அமைக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லோர் மனதிலும் ஏற்பட்டுள்ளது. டெல்லியில் நடந்த திமுக கட்சி அலுவலக திறப்பு விழாவில் பல்வேறு கட்சி தலைவர்கள் கலந்து கொண்டதே இதற்கான அடித்தளம் என்று மதிமுக தலைமைக் கழக செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் துரை வைகோ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “பெட்ரோல், டீசல், சமையல் சிலிண்டர் போன்றவற்றின் விலை தொடர்ந்து உயர்ந்து, விண்ணை முட்டும் அளவுக்கு வந்துவிட்டது. ஆனால், மத்திய அரசு மக்களின் மன நிலையை உணராமல் தொடர்ந்து எரிபொருள் விலையை உயர்த்தி வருகிறது. இதன் காரணமாக உணவுப் பொருட்கள், மருந்து, கட்டுமானப் பொருட்கள், ஆடைகள் என அனைத்து பொருட்களின் விலையும் உயரலாம். கொரோனா வைரஸ் தொற்று தாக்குதலில் இருந்து விடுபட்டு மக்கள் இயல்பு நிலைக்கு இப்போதுதான் திரும்பி வருகின்றன. இந்தச் சூழலில் மத்திய அரசின் விலையேற்ற அறிவிப்பு, மக்களின் நலனை எண்ணிப் பார்க்காமல் உள்ளதோ என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது.
டெல்லியில் அடித்தளம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசு குறைக்காவிட்டால் மதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டப் போராட்டம் நடைபெறும். இன்னும் 2 ஆண்டுகளில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வர உள்ளது. ஆளும் பாஜகவை எதிர்த்து வலுவான எதிர்கட்சிகள் அடங்கிய கூட்டணியை அமைக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லோர் மனதிலும் ஏற்பட்டுள்ளது. டெல்லியில் நடந்த திமுக கட்சி அலுவலக திறப்பு விழாவில் பல்வேறு கட்சி தலைவர்கள் கலந்து கொண்டதே இதற்கான அடித்தளம்.
மத்திய அரசின் கடமை

இலங்கையில் நெருக்கடியான நிலை ஏற்பட்டிருக்கிறது. இலங்கைக்கு மத்திய அரசு ஒரு மில்லியன் அளவுக்கு நிதியை வழங்கியுள்ளது. இதில் தவறு எதுவும் கிடையாது. ஆனால், இலங்கையில் வாழக்கூடிய தமிழர்கள் கடந்த 40 நாட்களாக சந்தித்து வரும் பிரச்சினைகள், கச்சத்தீவு பிரச்சினை, ராமேஸ்வரத்தில் இருந்து கடலில் மீன் பிடிக்க செல்லும் மீனவர்களை இலங்கை ராணுவம் கைது செய்தது போன்ற பிரச்சினைகளை எல்லாம் இலங்கைக்கு நிதி வழங்கும் போது பேச்சுவார்த்தை நடத்தி மத்திய அரசு தீர்வு காண வேண்டும். இது மத்திய அரசின் முக்கியமான கடமையாகும்.” என்று துரை வைகோ தெரிவித்துள்ளார்.
