தீயசக்தியின் அநியாயத்தை வெட்டி வீழ்த்தும் களமாக எதிர்வரும் சட்டமன்ற தேர்தல் அமையும். இபிஎஸ்-ஓபிஎஸ் கூட்டறிக்கை
ஒரு குடும்பத்தின் சுயநலத்திற்காகவும், சுரண்டல் சிந்தனைகளுக்கும், தமிழ்நாட்டையும் தமிழ் சமூகத்தையும் பலிகொடுத்து அதிகாரத்தை அடைய துடிக்கும் தீயசக்தி என நியாயத்தை வெட்டிவிடும் களமாக எதிர்வரும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் இருக்கும் என்பதை நினைவில் கொள்வோம்
ஒரு குடும்பத்தின் சுயநலத்திற்காகவும், சுரண்டல் சிந்தனைகளுக்கும் தமிழ் நாட்டையும், தமிழ் சமூகத்தையும் பறிகொடுத்து அதிகாரத்தை அடைய துடிக்கும் தீயசக்தியின் அநியாயத்தை வெட்டி வீழ்த்தும் களமாக எதிர்வரும் சட்டமன்ற பொதுத்தேர்தல் இருக்கும் என்பதை அதிமுக தொண்டர்கள் நினைவில் கொள்ளவேண்டும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் எம்ஜிஆர் பிறந்த நாளான இன்று அதிமுக தொண்டர்களுக்கு அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதன் விவரம் பின்வருமாறு:
தன்னை "தலையாக செய்வானும் தான்' என்று சங்க தமிழ் கூறும் வாழ்க்கை நெறிக்கு சிறந்த எடுத்துக்காட்டு புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்கள். வறுமையின் கோரப்பிடியில் வாடிய இளமை காலத்தில் தொடங்கி, புகழ் ஏணியின் உச்சத்தைத் தொட்டு நாடாளும் மன்னனாக வாழ்வை நிறைவு செய்த புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள், உழைப்பாலும், முயற்சியாலும் தன்னலம் துறந்து பிறர் நலம் பேணி வாழ்ந்த வாழ்க்கை முறையாலும் "மனிதர்களில் மாணிக்கம்" என்ற இறவாப் புகழ் பெற்ற சரித்திர நாயகர் ஆவார். அப்படிப்பட்ட புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஆல் வழங்கப்பட்ட கொடைதான் புரட்சித்தலைவி அம்மா அவர்கள். புரட்சித் தலைவர் ஆட்சியில் நீட்சியாகவும், அவர் திட்டமிட்டிருந்த சமூக புரட்சிகளையும், வளர்ச்சிகளையும் நடைமுறைப்படுத்தும் கலைகளை அறிந்தவராக சிறப்பாக ஆட்சி செய்தவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்.
மேலும் நமது இயக்கம் சமூக மாற்றத்திற்கான இயக்கம். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் அரசியல் கட்சி மட்டுமல்ல, ஏற்றத்தாழ்வுகள் இல்லாத எல்லோரும் சம உரிமையும் சம வாய்ப்பும் பெற்று மகிழ்ச்சியாக வாழ்வதற்கான இடையறாத முயற்சி தான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் உழைப்பு. ஜனநாயக பண்புகளை நிலைநாட்டி , சமத்துவ சமுதாயம் அமைத்து , சமதர்மம் காத்து , தமிழினம் இந்த உலகத்துக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்திட ஓயாது பாடுபடும் இயக்கம் தான் எம்ஜிஆரால் நிறுவப்பட்ட அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம். கழகத்தின் லட்சிய பயணத்தில் இதோ இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற பொதுத்தேர்தல் என்னும் ஜனநாயக போர்க்களத்தை நாம் சந்திக்கப் போகிறோம்.
2021ல் தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கப்போவது மக்களாட்சியின் மாண்புகளை போற்றி எல்லோரும் பங்குபெறும் உண்மை ஜனநாயகமா? அல்லது ஒரு குடும்பத்தின் பதவி வெறிக்கு மக்களை பலியிடும் போலி ஜனநாயகமா? என்ற வினாவிற்கு விடை காணப்போகும் களமாக எதிர்வரும் சட்டமன்ற பொதுத்தேர்தல் களம் அமையப்போகிறது.ஒரு குடும்பத்தின் சுயநலத்திற்காகவும், சுரண்டல் சிந்தனைகளுக்கும், தமிழ்நாட்டையும் தமிழ் சமூகத்தையும் பலிகொடுத்து அதிகாரத்தை அடைய துடிக்கும் தீயசக்தி என நியாயத்தை வெட்டிவிடும் களமாக எதிர்வரும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் இருக்கும் என்பதை நினைவில் கொள்வோம்.
வளர்ச்சி ஏதுமின்றி இருள் சூழ்ந்த மந்தநிலை, கட்டப்பஞ்சாயத்து, நில அபகரிப்பு, கட்டுப்பாடற்ற காட்டாட்சி, உலகத் தமிழர்களின் உரிமைகளை பற்றிய கவலை சிறிதும் அற்ற போலி தமிழ் முழக்கம். என்று திமுக நடத்தத் துடிக்கும் வன்முறை வெறியாட்டம் மீண்டும் தலை தூக்க முடியாத வண்ணம் தேர்தல் களத்தில் நாம் அனைவரும் விழிப்புடன் பணியாற்ற வேண்டிய நேரம் இது. புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சி தலைவி அம்மா ஆகியோர் நடத்திய இன்று நாமும் நடத்திக் கொண்டிருக்கக்கூடிய நல்லாட்சி தொடர்ந்திட புரட்சித்தலைவரின் 104வது பிறந்த நாளில் வெற்றி நடை போடும் தமிழகத்தை காத்திட நாம் அனைவரும் சபதம் ஏற்போம். கடுமையான களப்பணி ஆற்றுவோம். வெற்றி காண்போம். "வெற்றி நமது சொந்தம் வீரம் நமது சொத்து" " நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்" வெற்றி நமதே என அதில் கூறப்பட்டுள்ளது.