குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் - ஆர் கே நகர் மக்களிடம் மதுசூதனன் வேண்டுகோள்!
ஜெயலலிதா விட்டு சென்ற பணிகளை தொடர எனக்கே வாக்களிக்க வேண்டும் என்றும் குடும்ப ஆட்சிக்கு முற்றுபுள்ளி வைக்க வேண்டும் என்றும் ஆர்.கே.நகர் மக்களிடம் ஒ.பி.எஸ் அணி வேட்பாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆர் கே நகர் தொகுதி (38-வது வட்டம்) வினோபா நகர், நேதாஜி நகர், நெடுஞ்செழியன் நகர், ராஜீவ் காந்தி நகர் உள்ளிட்ட பகுதியில் உள்ள கட்சி முக்கிய பிரமுகர்கள், நாடார் உறவின்மறை சங்க நிர்வாகிகள், குடியிறுப்போர் நலசங்கம்,மற்றும் தொண்டு நிறுவனம், உள்ளிட்டவர்களை நேரில் சந்தித்து ஒ.பி.எஸ் அணி வேட்பாளர் மதுசூதனன் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அப்போது மதுசூதனன் பேசியதாவது :
நான் அமைச்சராக இருந்தபோது நல்ல திட்டங்களை நிறைவேற்றி உள்ளேன்.
இரயில்வே மேம்பாலம், பாதாள சாக்கடை திட்டம், குடிநீர் மற்றும் தெரு மின்விளக்கு உள்ளிட்ட பல திட்டங்களை நிறைவேற்றி உள்ளேன்.
குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
ஜெயலலிதாவின் மரணத்தை கண்டறிய அவரின் ஆன்மா எங்களுக்கு கட்டளையிட்டுள்ளது.
ஜெ மரணத்தை கண்டறிய ஒபிஎஸிடம் அனுமதி பெற்று பிரதமர் மோடி யிடம் முறையிடுவேன்.
எனக்கு வாக்களித்து வெற்றி பெற செய்தால் ஜெயலலிதா விட்டு சென்ற பணிகளை தொடர்ந்து மேற்க்கொள்வேன்.
மேலும் இன்னும் என்னற்ற பல பணிகளை செய்ய தொகுதி மக்கள் எனக்கு வாய்ப்பளித்து வாக்களிக்க வேண்டும்.
இவ்வாறு பேசினார்.
இதனை தொடர்ந்து பெண்கள் ஏராளமானோர் வேட்பாளர் மதுசூதனனுக்கு ஆரத்தி எடுத்து வெற்றி திலகமிட்டனர்.
முன்னதாக ஜமாத் அமைப்பை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் வேட்பாளர் மதுசூதனன் அவர்களுக்கு திருக்குர்ஆன் புத்தகத்தை பரிசாக வழங்கினர்.
இதில் ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் ஆர் எஸ் ராஜேஷ், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் ஆர் எஸ் ஜெனார்த்தனம் மாவட்ட மீனவரணி செயலாளர் ஏ.கணேசன், உள்ளிட்ட மாவட்ட பகுதி பிற அணி நிர்வாகிகள், வட்ட செயலாளர்கள், மகளிரணியினர் உள்பட பலர் உடன் இருந்தனர்.