இப்ப இரட்டை இலைதான் ஜெயிக்குமாம்! நா கூசாமல் பல்டி அடிக்கும் நாட்டாமை!
ஆர்.கே.நகரில் தேர்தலை நியாயமாகவும் ஜனநாயக முறைப்படியும் நடத்த வேண்டும் என்றும், அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதுபோல் உள்ளது என்றும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓகி புயல் கோரத்தாண்டவம் ஆடிய நிலையில், பாதிக்கப்பட்ட இடங்களை சமக தலைவர் சரத்குமார் இன்று
பார்வையிட்டார். அப்போது மீனவர்கள், விவசாயிகளை சந்தித்து அவர், நிலை குறித்து கேட்டறிந்தார். பேச்சியம்மாளின் இல்லத்துக்கு சென்ற சரத்குமார்
ஆறுதல் கூறிவிட்டு நிவாரண தொகையாக 10 ஆயிரம் ரூபாயை வழங்கினார். முன்னதாக திருச்செந்தூர் வந்த சரத்குமார், கோயிலின் மேற்கூரை
இடிந்து விபத்துக்குள்ளான பகுதியைப் பார்வையிட்டார்.
இதன் பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்தார் சரத்குமார். அப்போது, தமிழகத்திலுள்ள முருகன் ஸ்தலங்களில் இத்தலம் மிகவும் சிறப்பு வாய்ந்தது.
சுற்றுப்பிராகாரம் கட்டப்பட்டு கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாகச் சரியான பராமரிப்புப் பணிகள் செய்யாததாலேயே இந்தக் கட்டட விபத்து ஏற்பட்டுள்ளது என்றார்.
அரசு தாமதிக்காமல் புதிய சுற்றுப்பிராகார மண்டபத்தைக் கட்டி முடிக்க வேண்டும். இந்த விபத்தைக் காரணம்காட்டி, கடை அமைத்து வியாபாரம் செய்து
வரும் 80-க்கும் மேற்பட்ட கடைகளை உடனடியாகக் காலி செய்ய திருக்கோயில் நிர்வாகம் அறிவிப்பு விடுத்துள்ளது. மண்டபம் கட்டி முடிக்கும் வரை
இந்த வியாபாரிகளுக்குத் தற்காலிகமாகக் கடைகள் அமைக்க மாற்று ஏற்பாடு செய்து தர வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
ஆர்.கே.நகரில் தேர்தலை நியாயமாகவும் ஜனநாயக முறைப்படியும் நடத்த வேண்டும். ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் அணிக்கு இரட்டை இலைச்சின்னம்
கிடைத்திருப்பதால் ஆர்.கே.நகரில் அ.தி.மு.க-வுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதுபோலத் தெரிகிறது என்றும் சரத்குமார் கூறினார்.