ஆர்.கே.நகரின் 256 வாக்குச் சாவடிகளிலும் புதியவகை வாக்குப்பதிவு இயந்திரம் - துரிதப்படுத்தும் தேர்தல் ஆணையம்...!
256 வாக்குச் சாவடிகளிலும், யாருக்கு ஓட்டு போட்டோம் என்பதை அறிந்துகொள்ளும் வகையிலான வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, 4 மாதங்கள் கழித்து ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. தொகுதி மக்களுக்கு பணப்பட்டுவாடா
செய்யப்பட்டதாக கூறி தேர்தல் ரத்து செய்யப்பட்டது. ஆர்.கே.நகர் தொகுதியில் 44,999 போலி வாக்காளர்கள் உள்ளதாகவும், இந்த போலி வாக்காளர்களை நீக்கும் வரை தேர்தல் நடத்தக் கூடாது என்று திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதுகுறித்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. ஆர்.கே.நகர் தொகுதியில் 45,889 போலி வாக்காளர்கள் நீக்கபட்டுள்ளதாகவும் 9621 பேர் பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
திமுகவின் வழக்கு நிலுவையில் இருப்பதால் பணிகளைத் தொடங்க முடியவில்லை என்றும், கிருஸ்துமஸ் விடுமுறை வருவதால் வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என்று அவகாசம் கேட்கப்பட்டது. இதனை நிராகரித்த நீதிமன்றம், டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்ற உத்தரவில் எந்த மாற்றமும் இல்லை என்றும், தேர்தலுக்கான பணியைத் தேர்தல் ஆணையம் தொடங்கலாம் என்று உத்தரவிட்டது.
இதனால் தேர்தல் ஏற்பாடுகளை தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி துரிதப்படுத்தி உள்ளார். இதையொட்டி இன்னும் 2 நாட்களில் டெல்லி சென்று தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். அடுத்த மாதம் முதல் வாரத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், 256 வாக்குச் சாவடிகளிலும், யாருக்கு ஓட்டு போட்டோம் என்பதை அறிந்துகொள்ளும் வகையிலான வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.