The DMK MLA J. Anilankan criticized the Governors review
ஆளுநர் உரையை பற்றி மட்டுமே பேசமுடியும் எனவும் ஆளுநரின் தனிப்பட்ட விஷயங்கள் குறித்து பேசக்கூடாது எனவும் கூறி சபாநாயகர் தனபால் மறுப்பு தெரிவித்து அன்பழகனின் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்கி உத்தரவிட்டார்.
தமிழகத்தின் புதிய ஆளுநராக பொறுப்பேற்றுள்ள பன்வாரிலால் புரோகித், சமீபத்தில் கோயம்புத்தூரில் நேரடியாக பல பகுதிகளுக்கும் சென்று ஆய்வு நடத்தினார். மேலும் கோவை மாவட்ட அதிகாரிகளுடன் கலந்தாலோசனைக் கூட்டமும் நடத்தினார்.
இதைதொடர்ந்து கடலூரில் ஆய்வு மேற்கொண்ட ஆளுநர் புரோஹித்துக்கு எதிராக திமுகவினர் கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் ஆய்வை பாதியில் முடித்து கொண்டு சென்னை திரும்பினார்
ஆனாலும் ஆய்வு தொடரும் என ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அறிவிப்பு வெளியிட்டு ஆய்வு மேற்கொண்டுதான் வருகின்றார். ஆளுநரின் ஆய்வுக்கு எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தற்போது ஆர்.கே.நகர் எம்.எல்.ஏவாக பதவியேற்ற டிடிவி தினகரனும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று தொடங்கிய சட்டப்பேரவையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார். அதுகுறித்த விவாதங்கள் சட்டப்பேரவையில் இன்று நடைபெற்றது.
அதில், திமுகவை சேர்ந்த எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் ஆளுநர் ஆய்வு செய்தது குறித்து விமர்சித்து பேசினார். அப்போது ஆளுநர் உரையை பற்றி மட்டுமே பேசமுடியும் எனவும் ஆளுநரின் தனிப்பட்ட விஷயங்கள் குறித்து பேசக்கூடாது எனவும் கூறி சபாநாயகர் தனபால் மறுப்பு தெரிவித்து அன்பழகனின் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்கி உத்தரவிட்டார்.
