கர்நாடகாவில் இருந்த குமாரசாமி தலைமையிலான ஆட்சியை கலைக்க அதிமுகவிடம் இருந்து பாஜக தலைவர்கள் 360 கோடி ரூபாய் பெற்றதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றம்சாட்டியுள்ளார்.

திமுக-அதிமுக மோதல்

தமிழக பாரதிய ஜனதா கட்சிக்கும், திமுகவிற்கும் இடையே தொர்ந்து பல்வேறு கருத்து மோதல்கள் ஏற்பட்டு வருகின்றது. இதன் காரணமாக ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி புகார் தெரிவித்து வருகின்றனர். மின்சார வாரியத்தில் பல கோடி ரூபாய் முறை கேடு நடைபெற்றுள்ளதாகவும் இதில் திமுக தலைமைக்கு நெருக்கமானவர்கள் முதலீடு செய்துள்ளதாகவும் பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்த அமைச்சர் செந்தில் பாலாஜி 24 மணி நேரம் கெடு விதித்து எச்சரிக்கை விடுத்து இருந்தார் . இதனை தொடர்ந்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் துபாய் பயணத்தை விமர்சித் பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்து இருந்தார். இதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்த திமுக, நஷ்ட ஈடு கேட்டு அண்ணாமலைக்கு நோட்டிஸ் அனுப்பியுள்ளது. இதனையடுத்து தன் மீது குற்றசாட்டு கூறிய திமுகவினர் முடிந்தால் தன்னை கைது செய்து பாருங்கள் என திமுகவிற்கு சாவால் விடுத்திருந்தார். 

ஆட்சியை கலைக்க அதிமுக உதவி?

இதனால் திமுக- பாஜக இடையே கருத்து மோதல் அதிகரித்து காணப்பட்டது. இந்தநிலையில் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் நடைபெற்ற திமுக பொதுகூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, கர்நாடகாவிலுள்ள குமாரசாமி தலைமையிலான அரசை கவிழ்ப்பதற்காக சுமார் 360 கோடி ரூபாயை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மற்றும் கட்சியிடம் இருந்து பாஜக தலைவர்கள் வாங்கினார்களா இல்லையா என கேள்வி எழுப்பினார். நான் தான் பாஜகவினர் மீது குற்றம்சாட்டியுள்ளேன். அண்ணாமலை தான் என் மீது வழங்கு தொடர வேண்டும் என கூறினார். தொடர்ந்து பேசிய ஆர்.எஸ் பாரதி, கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான ஆட்சி கலைப்பதற்காக அப்போதைய தமிழக முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து 360 கோடி ரூபாய் வாங்கித்தான் கர்நாடகாவில் எம்எல்ஏக்களை பாஜகவினர் விலைக்கு வாங்கினார்கள் என குற்றம்சாட்டினார். இப்படிப்பட்ட பாஜக திமுக மீது பழி சொல்வதற்கு என்ன யோக்கியதை உள்ளது என்ற கேள்வியையும் எழுப்பினார்

பாஜகவிற்கு கப்பம் கட்டும் அதிமுக

மேலும் பாஜகவினர் அதிமுகவை மிரட்டி பணம் வசூலித்துக் கொண்டு இருந்ததாக தெரிவித்தவர், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பாஜகவிற்கு கப்பம் கட்டியதாகவும் குற்றம்சாட்டினார். இதனை இல்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பாஜகவினரால் கூற முடியுமா? என கேள்வி எழுப்பினார்.. இந்தியாவிலேயே மோசமான ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான கட்சி எது என்றால் அது பாஜகதான் என்றும் ஆர்.எஸ். பாரதி விமர்சித்தார்