சபாநாயகருக்கு எதிராகவும் போர்க்கொடி - அறிக்கை மட்டுமே விடும் ஸ்டாலின்...!
18 அதிமுக எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்தது சட்டவிரோதம் , ஜனநாயக படுகொலை எனவும் ஜனநாயக நெறிமுறைகளை சீர்குலைத்துள்ள சபாநாயகர் தனபால் பதவி விலக வேண்டும் எனவும் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை டி.டி.வி. ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஆளுநரிடம் கடிதம் கொடுத்தனர்.
இது தொடர்பாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று அரசு கொறடா, சபாநாயகருக்கு பரிந்துரை செய்திருந்தார். இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு டிடிவி ஆதரவு எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அளித்திருந்தார்.
இந்த நிலையில், டிடிவி தினரனுக்கு ஆதரவு அளித்து வந்த எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவதாக சபாநாயகர் தனபால் சார்பில் சட்டப்பேரவை செயலாளர் பூபதி வெளியிட்டுள்ளார்.
இதையடுத்து நாங்கள் நீதிமன்றத்தை நாடுவோம் என டிடிவி தரப்பினர் கூவி வருகின்றனர். இதுகுறித்து திமுக செயல்தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், குறுக்கு வழியில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த எடப்பாடி அரசு முயற்சி செய்வதாகவும் 18 அதிமுக எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்தது சட்டவிரோதம் , ஜனநாயக படுகொலை எனவும் தெரிவித்துள்ளார்.
எத்தனை தில்லுமுல்லுகள் செய்தாலும் எடப்பாடி அரசு மக்கள் மன்றத்தில் தோற்பது உறுதி எனவும், ஜனநாயக நெறிமுறைகளை சீர்குலைத்துள்ள சபாநாயகர் தனபால் பதவி விலக வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
சட்டப்பேரவையில் பதவியில் நீடிக்கும் தார்மீக உரிமையை தனபால் இழந்துவிட்டார் எனவும், அதிமுக உறுப்பினர் போல் சபாநாயகர் தனபால் செயல்பட்டு இருப்பது கண்டனக்குறியது எனவும் தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் பதவிக்கு உரிய மாண்பை தனபால் கெடுத்துவிட்டதாகவும் பழனிசாமிக்கு எதிராக வாக்களித்த ஒபிஎஸ் உள்ளிட்ட எம்.எல்.ஏக்களை பதவி நீக்கவில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.