பதிலடி கொடுக்க தயாராகும் டிடிவி தரப்பு... - எடப்பாடி முடிவு குறித்து தீவிர ஆலோசனை...!!!
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் சசிகலா தினகரனை கட்சியில் இருந்து நீக்க முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில், டிடிவி தினகரன் தரப்பு எம்.எல்.ஏக்கள் 19 பேர் தீவீர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சசிகலாவை கட்சியில் இருந்து நீக்குவது என எடப்பாடி குழு முடிவெடுத்ததையடுத்து டிடிவி தினகரன் தரப்பு அதிரடி முடிவுகளை எடுத்து வருகின்றனர்.
மேலும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் ஆளுநரிடம் கடிதம் அளித்தனர்.
இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்.பிக்கள்., எம்எல்ஏக்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள், மாநில நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 2 மணி நேரம் கூட்டம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதில், சசிகலா தினகரனை கட்சியில் இருந்து நீக்கவும், சசிகலா தினகரன் கட்சி நடவடிக்கைகள் செல்லாது எனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
மேலும் டிடிவி தினகரன் அறிவித்த பொறுப்புகளும் செல்லாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைதொடர்ந்து டிடிவி தரப்பு எம்.எல்.ஏக்கள் 19 பேரும் புதுச்சேரியில் முதலமைச்சர் எடப்பாடி முடிவு குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.