ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை முடிவடையவுள்ள நிலையில்,விரைவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜெயலலிதா இறந்தது எப்படி?

2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்று சாதனை படைத்தார் ஜெயலலிதா, இரண்டாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சி சிம்மாசனத்தில் அமர்ந்த ஜெயலலிதாவிற்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இரவோடு இரவாக அனுமதிக்கப்பட்டு சிறப்பு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். இருந்த போதும் 75 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு ஜெயலலிதா மரணம் அடைந்தார். இந்த சம்பவம் அதிமுக தொண்டர்கள் மட்டுமில்லாமல் இந்தியாவே அதிர்ச்சி அடைய செய்தது. இந்தநிலையில் திடீரென ஜெயலலிதா சமாதிக்கு சென்ற ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் விசாரணை நடத்த வேண்டும் என புது குண்டைத் தூக்கிப் போட்டார். இதனையடுத்து ஓபிஎஸ்-இபிஎஸ் என இரு தரப்பாக அதிமுக பிளவுபட்டது. தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆன நிலையில் தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையின் முடிவில் ஓபிஎஸ் இபிஎஸ் அணி இணைந்தது. இணைப்பில் முக்கிய கோரிக்கையான ஜெயலிதா மரணத்தில் விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்பட்டு ஆறுமுகசாமி ஆணையம் 2017 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.சுமார் இரண்டு வருடங்களுக்கு மேல் நடைபெற்ற விசாரணை ஆணையத்தில் 150க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடைபெற்றது.

நிறைவடையும் நிலையில் விசாரணை ?

இந்த விசாரணை சரியான முறையில் நடைபெறவில்லையென்றும் தங்கள் மீது குற்றம் சுமத்தும் வகையில் ஆணையம் செயல்படுதவதாக அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்திருந்தது.இதனையடுத்து ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு நீதிமன்றம் தடைவிதித்திருந்தது. உச்சநீதிமன்றத்தில்ஆறுமுகசாமி ஆணையம் வழக்கு தொடர்பான விசாரணை முடிவடைந்த நிலையில், ஆறுமுகசாமி ஆணையம் மீண்டும் விசாரணை நடத்த அனுமதித்தது. அப்போது ஆறுமுக சாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவுவதற்காக எய்ம்ஸ் மருத்துவர்களையும் நீதிமன்றம் நியமித்தது. இதனையடுத்து அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்களிடம், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்திடமும் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தியது. இந்தநிலையில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அனைத்து தரப்பிலும் விசாரணை முடிவடைந்துள்ள நிலையில் ஆறுமுகசாமி ஆணையம் தங்களின் முதல் கட்ட அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே ஜெயலலிதா மரணம் எப்படி நிகழ்ந்தது, மரணத்திற்கு யராவது பொறுப்பா ? என்ற கேள்விகளுக்கு விடை தெரியவுள்ளது. ஆறுமுகசாமி ஆணையத்தின் இடைக்கால அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடைபெறவுள்ள சட்டமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.