The Chief Minister petition should be rejected want cbi inquiry

அதிமுக எம்.எல்.ஏக்களின் குதிரை பேர விவகாரத்தில் முதலமைச்சரின் பதிலை நிராகரிக்குமாறு திமுக செயல்தலைவர் ஸ்டாலின் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு சென்ற பின்பு எடப்பாடி பழனிசாமி முதன்மை வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார். அப்போது அவருக்கு ஆதரவு அளிக்கும் எம்.எல்.ஏக்கள் கூவத்தூர் ரிசார்ட்டில் தங்க வைக்கபட்டனர்.

பின்னர், பெரும்பான்மையை நிரூபித்து முதலமைச்சரானார் எடப்பாடி. இதைதொடர்ந்து கூவத்தூரில் வைத்து எம்.எல்.ஏக்கள் விலை பேசப்பட்டதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டின.

இதனிடையே ஒ.பி.எஸ் அணியின் மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ சரவணன் பணபேரம் குறித்து பேசிய வீடியோ ஒன்றை ஆங்கில செய்தி சேனல் வெளியிட்டது. இதற்கு சரவணன் தரப்பில் இருந்து மறுப்பு தெரிவிக்கபட்டது.

இதைதொடர்ந்து நடைபெற்ற சட்டபேரவையில் சரவணன் பேசிய வீடியோ குறித்து பேச ஸ்டாலினுக்கு சபாநாயகர் மறுப்பு தெரிவித்தார். இதனால் இதுகுறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் ஸ்டாலின்.

இதுகுறித்த வழக்கில் ஆஜரான முதலமைச்சர் எடப்பாடி எம்.எல்.ஏக்களுக்கு சொந்த விருப்பத்தின் பேரில் முடிவு எடுக்க உரிமை உள்ளதால் விசாரனை தேவையில்லை என தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று அதிமுக எம்.எல்.ஏக்களின் குதிரை பேர விவகாரத்தில் முதலமைச்சரின் பதிலை நிராகரிக்குமாறு ஸ்டாலின் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். மேலும் பணம், நகைகள் பரிமாற்றம் நடந்திருப்பதால் மனு சிபிஐ விசாரனைக்கு உகந்தது எனவும் மனுவில் தெரிவித்துள்ளார்.