முதலமைச்சர் பெருந்தன்மையோடு அழைத்தார்.. அதிமுக புறக்கணித்தது அவர்களின் நிலைபாடு. அப்பாவு கருத்து.
சட்டமன்றம் நூற்றாண்டு விழா மற்றும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் படத்திறப்பு விழா நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மற்றும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.
சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவில் அதிமுகவினர் பங்கேற்காதது அவர்களின் நிலைப்பாடு என சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.தமிழக சட்டப்பேரவை யின் நூற்றாண்டு விழா மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவப்படம் திறப்பு விழா முடிந்தபின்னர் சபாநாயகர் அப்பாவு இவ்வாறு கூறினார்.
சட்டமன்றம் நூற்றாண்டு விழா மற்றும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் படத்திறப்பு விழா நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மற்றும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். அதனைத் தொடர்ந்து முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் திருவுருவப் படத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்துவைத்தார். அதனைத் தொடர்ந்து, சபாநாயகர் அப்பாவு வரவேற்புரை நிகழ்த்தினார். முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மற்றும் ஆளுநர் ஆகியோர் உரையாற்றினர்.
இந்நிகழ்ச்சியில் திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மற்றும் பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கேவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆனால் முறையாக அழைப்பு விடுத்தும், இந்த நிகழ்ச்சியை அதிமுக புறக்கணித்தது. அதாவது முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் திருஉருவப்படத்தை சட்டப்பேரவையில் திறந்த போது அதை திமுக புறக்கணித்ததை காரணம் காட்டி, அதிமுக கருணாநிதியின் படத்திறப்புவிழாவை புறக்கணிப்பு செய்தது. இது தமிழக அரசியல் களத்தில் விவாதப்பொருளாக மாறியுள்ளது.
திட்டமிட்டபடி கருணாநிதியின் உருவப்பட திறப்பு விழா குடியரசு தலைவரின் சிறப்புரையுடன் நடத்து முடிந்தது.பின்னர் சபாநாயகர் அப்பாவு மற்றும் துணை சபாநாயகர் பிச்சாண்டி, திமுக கொறடா கோவை செழியன் ஆகியோர் மெரினாவில் உள்ள கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அப்பாவு தமிழக வரலாற்றிலேயே இது பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாள் எனவும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவப்படம் திறப்பு விழா சீரும் சிறப்புமாக இன்று நடைபெற்றதாகவும் கூறினார். மேலும் அதிமுகவினர் விழாவில் புறக்கணித்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், முதல்வர் மு.க ஸ்டாலின் பெருந்தன்மையோடு அனைத்து கட்சிகளையும், விழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்தார், ஆனால் அதிமுக அதில் பங்கேற்கவில்லை. அது அவர்களுடைய நிலைப்பாடு எனவும் தெரிவித்தார்.