The Chennai High Court has ordered the case of BJP national secretary H. Raja.

பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மீது வழக்குப்பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இரு மதத்தினர் இடையே கலவரம் ஏற்படுத்தும் வகையில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா அறிக்கை வெளியிட்டதாக தடா ரஹீம் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

அந்த மனுவில், ராமநாதபுரத்தில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இந்து முன்னணி பிரமுகர் வெட்டப்பட்டார். இந்தச் சம்பவத்துக்கு இஸ்லாமியர்கள்தாம் காரணம் என்று பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா அறிக்கையும் பேட்டியும் கொடுத்துள்ளார். 

இது தொடர்பாகக் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், சொத்துத் தகராறில் இந்து முன்னணியைச் சேர்ந்த 4 பேர் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனிடையே, ஹெச்.ராஜா இருசமூகத்தினர் இடையே கலவரத்தை ஏற்படுத்தும் விதமாக அவதூறாகப் பேசியுள்ளார். 

அவர்மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். அந்தப் புகாரின் பேரில் ஹெச்.ராஜாமீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என தெரிவித்திருந்தார். 

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் முகாந்திரம் இருந்தால் சட்டத்திற்கு உட்பட்டு ஹெச் ராஜா மீது வழக்குப்பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டது.