“முடியவே முடியாது..” எச்சரித்த நீதிமன்றம்..எடப்பாடிக்கு புது தலைவலி.. மீண்டும் சூடு பிடிக்கும் கோடநாடு வழக்கு
கோவையை அடுத்த கோடநாடு கொலை வழக்கில், மேல் விசாரணை நடந்து வருவதால், புதிதாக சாட்சிகளை விசாரிக்கக் கோரிய மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.
கோடநாடு கொலை வழக்கு :
நீலகிரி மாவட்டம், கோடநாட்டில் உள்ள பங்களாவுக்கு, மறைந்த முதல்வர் ஜெயலலிதா அடிக்கடி சென்று தங்குவார். அவர் முதல்வராக இருந்த போது, அந்த பங்களா, அவரின் முகாம் அலுவலகமாகவும் இயங்கியது. ஜெயலலிதா மறைவுக்கு பின், இந்த பங்களாவின் எஸ்டேட் காவலாளி ஓம்பகதுார் என்பவரை ஒரு கும்பல் கொலை செய்து, பங்களாவுக்குள் புகுந்து சில பொருட்களை கொள்ளையடித்து சென்றது.
இந்தக் கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக, சயான், மனோஜ் உள்ளிட்ட 12 பேர் கைது செய்யப்பட்டனர். ஊட்டி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் உள்ளது. இவ்வழக்கில் கூடுதல் விசாரணை கோரி, சயான் தாக்கல் செய்த மனுவை விசாரித்த ஊட்டி நீதிமன்றம், அதற்கு அனுமதி அளித்தது.
வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள திபு உள்ளிட்ட மூவர், புதிதாக சாட்சிகளை விசாரிக்கக் கோரிய மனு நிராகரிக்கப்பட்டதால், உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இம்மனு, நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன், விசாரணைக்கு வந்தது.
எடப்பாடி பழனிசாமி தரப்பு :
அரசு தரப்பில், சிறப்பு வழக்கறிஞர் எம். ஷாஜகான், ''மேல் விசாரணை நடந்து வருகிறது. முக்கிய வழக்கு என்பதால், மேல் விசாரணைக்கு பின்னே சாட்சி விசாரணையை துவக்க முடியும், என்றார். முன்னாள் முதல்வர் பழனிசாமி சார்பில், வழக்கறிஞர் அய்யப்பராஜ் ஆஜராகி, ''இந்த வழக்கில் சாட்சிகளாக சேர்க்க கோரப்படுபவர்கள் சார்பில், பதில் மனு தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும்.
குற்றவியல் நடைமுறைச் சட்டப்படி, அவர்களுக்கும் சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டும், என்றார்.இதையடுத்து, இவ்வழக்கில் மேல் விசாரணை நடந்து வருவதால், மனுவின் விசாரணையை, நான்கு வாரங்களுக்கு நீதிபதி தள்ளி வைத்தார். கோடநாடு கொலை வழக்கு மீண்டும் சூடுபிடித்துள்ளதால், அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.