மத்திய அரசு மொழிதிணிப்பு செய்யவில்லை.. நாட்டின் வளர்ச்சியில் தமிழகத்தின் பங்கு முக்கியம்.. ஆளுநர் ரவி பேச்சு.
மத்திய அரசு எந்தவகையிலும் மொழி திணிப்பு செய்யவில்லை என்றும், புதிய கல்விக் கொள்கையில் அந்தந்த மாநில மொழிக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்றும் ஆளுநர் விளக்கமளித்துள்ளார்.
மத்திய அரசு எந்தவகையிலும் மொழி திணிப்பு செய்யவில்லை என்றும், புதிய கல்விக் கொள்கையில் அந்தந்த மாநில மொழிக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்றும் ஆளுநர் விளக்கமளித்துள்ளார். நாட்டின் வளர்ச்சியில் தமிழ்நாடு அதிக முக்கிய பங்காற்றி வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.கோவை பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட அவர் இவ்வாறு பேசினார்.
திமுக ஆட்சி அமைந்தது முதல் பாஜக அதிமுக இடையே மோதல் பன்மடங்கு அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக ஆர். என் ரவி ஆளுநராக நியமிக்கப்பட்டது முதல் தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையேயான உறவு மோதல் நிறைந்ததாகவே இருந்து வருகிறது. தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்கள் மீது ஆளுநர் பாராமுகமாக இருந்து வருகிறார், இதனால் தமிழக அரசின் நிர்வாணத்தை முடக்கும் நடவடிக்கையில் அவர் ஈடுபடுகிறார் என்ற குற்றச்சாட்டு அவர் மீது வைக்கப்படுகிறது. ஆளுநருக்கு எதிராக தொடர்ந்து அமைச்சர்கள் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். ஆளுநர் மாளிகை பாஜகவில் தலைமை அலுவலகம் போல் செயல்படுகிறது என்றும் ஆளும் கட்சி மற்றும் ஆளும் கூட்டணி கட்சியினர் விமர்சிக்கின்றன.
தொடர்ந்து ஆளுநரின் செயல்பாடுகள் தமிழகத்திற்கும் தமிழக மக்களுக்கும் விரோதமாக இருந்து வருவதாகவும் அக்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இதேபோல் புதிய கல்விக் கொள்கையின் மூலம் இந்தி மொழி திணிப்பு, சமஸ்கிருத திணிப்பு போன்றவற்றிற்கு மத்திய அரசு முயற்சிக்கிறது என்ற விமர்சனத்தையும் திமுக அரசு தொடர்ந்து முன்வைத்து வருகிறது. இந்நிலையில் கோவை பல்கலைக்கழகத்தின் 37 வது பட்டமளிப்பு விழாவில் ஆளுனர் ஆர்.என் ரவி கலந்து கொண்டார் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி மேடையில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர் பட்டம் பெற்ற அனைத்து மாணவ மாணவிகளுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். வாழ்க்கையில் நீங்கள் புதிய பொறுப்புகளை சந்திக்க இருக்கிறீர்கள். சவால்களை எதிர்கொள்ளாமல் வெற்றிகளை நாம் சந்திக்க முடியாது. நாடு 75வது சுதந்திர தினத்தில் என்ன சாதித்தோம் என்ன சாதித்திருக்கிறோம் என அவர் பேசினார்.
நாடு நூறாவது ஆண்டு சுதந்திரத்தை கொண்டாடும்போது இந்தியா உலக நாடுகளுக்கு தலைமையாக இருக்கும் என்றார். இன்னும் சில வருடங்களில் நாடு நல்ல நிலையை எட்டும், சுகாதாரம் நல்ல குடிநீர், மின்சாரம், கல்வி, உணவு அனைத்திலும் தன்னிறைவு அடையும் என்றார். குறிப்பாக கடந்த 7 ஆண்டுகளில் மருத்துவ கல்லூரிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் இரட்டிப்பாகி இருக்கிறது என்றார். இந்த வெற்றிப் பயணத்தில் தமிழ்நாடு முக்கிய பங்காற்றி வருவதாக கூறினார். எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் மத்திய அரசு மொழியை திணிக்கவில்லை எனக் கூறிய அவர் புதிய கல்விக்கொள்கையில் அந்தந்த மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்றார்.