ஆளுநருக்கு வலுக்கும் எதிர்ப்பு...! காவிரி உரிமை மீட்புக்குழு கருப்புக்கொடி...!
தஞ்சாவூர் தபால் நிலையத்தில் ஆய்வு செய்து வரும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு காவிரி உரிமை மீட்புக்குழு கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் ஆய்வு பணிகளை மேற்கொள்வேன் என தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்திருந்தார்.
அதன்படி கோயம்புத்தூர், கடலூர் ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டார். மேலும் அதிகாரிகளுடன் ஆலோசனையும் நடத்தினார். இதற்கு திமுக, விடுதலை சிறுத்தை கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், கோவை, கடலூரை தொடர்ந்து தஞ்சையில் ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளார். இதற்காக இன்று காலையிலேயே தஞ்சை சென்றார்.
இரண்டு நாள் பயணமாக தஞ்சை சென்றுள்ள தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தஞ்சாவூர் பெரிய கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு இந்து சமய அறநிலையத்துறை, அரண்மனை தேவஸ்தானம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
தஞ்சையில் உள்ள தென்னக பண்பாட்டு மையம் சார்பில் சலங்கை நாதம் கலை விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
அங்கு நடைபெற்ற கைவினை கண்காட்சி அரங்குகளை ஆளுநர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதைதொடர்ந்து தற்போது தபால் நிலையத்தில் ஆளுநர் புரோகித் ஆய்வு செய்து வருகிறார். அங்கு அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து காவிரி உரிமைக்குழு கருப்பு கொடி காட்டி பேரணியில் ஈடுபட்டு வருகின்றனர்.