the case filed against dinakaran victory hearing today in high court

ஆர்.கே.நகரில் தினகரன் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரிக்கப்படுகிறது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், ஆளுங்கட்சியான அதிமுக வேட்பாளரை 40707 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, தினகரன் அபார வெற்றி பெற்றார். ஹவாலா முறையில் பணப்பட்டுவாடா செய்தே தினகரன் வெற்றி பெற்றதாக ஆளும் அதிமுகவும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் குற்றம்சாட்டின.

பணப்பட்டுவாடா செய்து வெற்றி பெற்ற தினகரனின் வெற்றி, செல்லாது என அறிவிக்கக்கோரி சென்னையை சேர்ந்த ராமமூர்த்தி என்ற வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், சுயேட்சையாக போட்டியிட்டு ஆர்.கே.நகரில் வெற்றி பெற்ற தினகரன், பணம் கொடுக்காமல் வெற்றி பெற்றிருக்க முடியாது. ஆர்.கே.நகரில் அதிகளவில் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையமும் தெரிவித்துள்ளது. எனவே தினகரனின் வெற்றி செல்லாது என அறிவித்து அவர் எம்.எல்.ஏவாக செயல்பட தடைவிதிக்க வேண்டும். அவர் சட்டசபைக்குள் செல்லவும் தடை விதிக்க வேண்டும் என அந்த மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வர உள்ளது. இதற்கிடையே தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கும் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரிக்கப்படுகிறது.