ஆளுங்கட்சியினர் மிரட்டல்! ஆங்கிலேயர்களே இந்து மதத்தை அழிக்க முடியவில்லை.. இவர்கள் எம்மாத்திரம்? - மதுரை ஆதினம்
பட்டினபிரவேசம் என்பது 500 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. மதசார்பற்ற நாடு என சொல்லிக்கொண்டு ஒரு மதத்தை மட்டும் கட்டுப்படுத்துவது ஏன்?
என்னுடைய உயிருக்கு ஆபத்து என்றால் நான் பிரதமரையும், உள் துறை அமைச்சரையும் நேரில் சந்தித்து ஆளுகட்சி குறித்து பேசுவேன் என்று மதுரை ஆதினம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தெரிவித்துள்ளார்.
தருமபுரம் ஆதினத்தின் பட்டின பிரவேச விவகாரத்தில் தமிழக அரசுக்கு எதிராக கருத்துகளை தெரிவித்திருந்த மதுரை ஆதினம், அடுத்ததாக ஆளுங்கட்சி மீது பரபரப்பை புகாரை தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் களிமேடு கிராமத்தில் தேர் விபத்து நிகழ்ந்த இடத்தை பார்வையிட்ட மதுரை ஆதீனம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “களிமேட்டில் அப்பர் சதய விழாவை ஒவ்வொரு ஆண்டும் அடியார்கள் சிறப்பாக நடத்தி வந்திருக்கின்றனர். ஆனால், இந்த தேர் விபத்து நடைபெற்றது மிகவும் துயரமாக இருக்கிறது.
ஒரு தேர் வரும் வழியில் மின் ஒயர்கள் இருந்தால், அதற்கேற்ப மின் துறை உரிய ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும். அதேபோல் சாலையை நெடுஞ்சாலைத் துறை சீரமைத்து கொடுத்திருக்க வேண்டும். இதில் யார் மேல தவறு உள்ளது என்பது கடவுளுக்கே வெளிச்சம். ஆனால், இது போன்ற விபத்துகள் இனி தமிழகத்தில் நடக்கக் கூடாது. போன உயிர்கள் போனதாக இருக்க வேண்டும். இனி மேலாவது அரசு கவனமுடன் இருக்க வேண்டும். களிமேடு தேர் விபத்தில் உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய மதுரை ஆதீனம் சார்பில் பிரார்த்திக்கிறேன்.
மதுரை ஆதீன கோயில்களின் இடங்களை குத்தகைக்கு வைத்துக் கொண்டு ஆளுங்கட்சியினர் அராஜகம் செய்துக்கொண்டிருக்கிறார்கள். முன்பிருந்த சன்னிதானத்தின் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால், அதைக் காரணமாக வைத்துக் கொண்டு அவர்கள் குத்தகை கொடுக்கவில்லை. முன்பிருந்த சன்னிதானம் குத்தகையும் கேட்கவில்லை. ஆனால், நான் கேட்டால் கொடுக்க மறுக்கிறார்கள், சட்டப்பேரவையில் கோயில் திருப்பணி செய்யுமாறு கூறுகிறார்கள். குத்தகையைக் கொடுத்தால்தானே கோயில் திருப்பணிகளை செய்ய முடியும். குத்தகையே கொடுப்பதில்லை, நிலத்தின் வரியையும் கொடுப்பதில்லை,
கோயில் இடத்தில் வீட்டைக் கட்டிக் கொண்டு வாடகையும் கொடுப்பதில்லை. இதை கேட்டால் என்னை அடிப்பேன் என மிரட்டுகிறார்கள். ‘நீ திருப்பணி செய்திடுவியா மிரட்டுகின்றனர். இதில் எல்லா அரசியல் கட்சியினரும் உள்ளனர். ஆனால், ஆளுங்கட்சியினர்தான் அதிக இடத்தை வைத்துள்ளனர். பட்டினபிரவேசம் என்பது 500 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. மதசார்பற்ற நாடு என சொல்லிக்கொண்டு ஒரு மதத்தை மட்டும் கட்டுப்படுத்துவது ஏன்? இந்து சமயத்தை அழிக்க ஆங்கிலேயர்களாலே முடியவில்லை. இவர்கள் என்ன செய்து விட முடியும்? இதையெல்லாம் மேலே உள்ள கடவுள் பார்த்துக் கொள்வார்.
நான் எனது மடத்துக்குட்பட்ட கஞ்சனூர் கோயிலுக்கு செல்கிறேன். என்னை யாரும் தடுக்க முடியாது. அந்தக் கோயிலுக்கு உட்பட்ட பகுதியில் மடத்தின் சொத்துகளை வைத்துக் கொண்டு ஆளுங்கட்சியினர் மிரட்டுகிறார்கள். என்னுடைய உயிருக்கு ஆபத்து என்றால் நான் பிரதமரையும், உள் துறை அமைச்சரையும் நேரில் சந்தித்து ஆளுகட்சி குறித்து பேசுவேன். மேற்கொண்டு என்ன நடந்தாலும் நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று மதுரை ஆதினம் தெரிவித்துள்ளார்.