திமுகவின் 10 மாத ஆட்சியில் தேர்தல் வாக்குறுதிகளை எதையும் இந்த அரசு நிறைவேற்றவில்லை. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தமிழ்நாடு முழுவதும் பாஜக வெற்றி பெற்று மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்திருக்கிறது.

தமிழகத்தில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான மறைமுகத் தேர்தலில் பாஜகவின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து மத்திய அமைச்சர் எல்.முருகன் பதில் அளித்துள்ளார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வாக்கு சதவீத அடிப்படையில் திமுக, அதிமுகவுக்கு அடுத்த இடத்தைப் பாஜக பெற்றுள்ளது. ஆனால், வெற்றி விகிதத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ் கட்சிகளுக்கு அடுத்தப்படியாக பாஜக இடம் பெற்றுள்ளது. இதனால், தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி பாஜகத்தான் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் கூறி வருகிறார்கள். பாஜகவினரின் இந்தப் பேச்சை காங்கிரஸ் உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இந்நிலையில் மத்திய அமைச்சரும் தமிழக பாஜக முன்னாள் தலைவருமான எல்.முருகன், அண்ணாமலை வழியில் தமிழகத்தில் பாஜக மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

சென்னையில் எல்.முருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது இதுபற்றி அவர் கூறுகையில், “திமுகவின் 10 மாத கால ஆட்சியில் தேர்தல் வாக்குறுதிகளை எதையும் இந்த அரசு நிறைவேற்றவில்லை. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தமிழ்நாடு முழுவதும் பாஜக வெற்றி பெற்று மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்திருக்கிறது. மறைமுகத் தேர்தலில் பாஜக பெரும்பான்மை பெற்ற இடங்களில், பாஜகவினரே தலைவர் பதவிகளுக்கு போட்டியிடுவார்கள். பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லாத இடங்களில் யாருக்கு ஆதரவளிப்பது என்பதை கட்சி தலைமை முடிவு செய்யும்” என்று எல். முருகன் தெரிவித்தார். 

மேலும் எல்.முருகனிடம் உக்ரைன் நிலவரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த எல்.முருகன், “உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை மீட்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்து வருகிறது. மத்திய அரசின் முயற்சியில்தான் இந்திய மாணவர்கள் திரும்ப அழைத்து வரப்படுகிறார்கள். இதில் தமிழ்நாடு அரசு பயணச் செலவை ஏற்கிறேன் என்று சொல்வது எந்த அளவுக்கு சரியென்று எனக்குத் தெரியவில்லை” என்று அவர் தெரிவித்தார்