பொதுக்குழுவுக்கு இடைக்கால தடை - பெங்களூர் நீதிமன்றம் உத்தரவு...!
அதிமுக பொதுக்குழுவை கூட்டுவதற்கு பெங்களூரு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
எடப்பாடி அணியும் ஒபிஎஸ் அணியும் இணைந்த பின்னர் நாளை அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என எடப்பாடி அறிவித்தார்.
இதற்கு எதிராக டிடிவி தினகரன் தரப்பு எம்.எல்.ஏக்கள் மறுப்பு தெரிவித்தனர். மேலும், பொதுக்குழு கூட்டுவதற்கு பொதுச்செயலாளர் மற்றும் துணைப் பொதுச்செயலாளருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்பதால் நாளை நடைபெற உள்ள பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என டி.டி.வி தினகரன் ஆதரவாளரான கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி பெங்களூர் சிவில் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது வழக்கை விசாரித்த பெங்களூர் நீதிமன்றம் நாளை நடைபெறவிருந்த அதிமுக பொதுக்குழுவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடிக்கு பொதுக்குழுவை கூட்டக்குடாது என கூறி பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ வெற்றிவேல் தொடர்ந்த மேல் முறையீட்டு மனு மீதான தீர்ப்பு இன்னும் சற்று நேரத்தில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடதக்கது.