The Apollo Hospital administering the documents of Jayalalithaa treatment in the inquiry commission
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சைகள் தொடர்பான ஆவணங்களை, நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்போலோ நிர்வாகம் இன்று அளித்துள்ளது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு, லண்டன் டாக்டர், டெல்லி எய்ம்ஸ் டாக்டர்கள், அப்போலோ டாக்டர்கள் என சிகிச்சை அளித்தனர். 75 நாட்கள் சிகிச்சை பெற்று ஜெயலலிதா சிகிச்சை பலனின்றி 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி உயிரிழந்தார். ஜெயலலிதாவின் மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டது.
இதையடுத்து ஜெ., மரணம் தொடர்பாக, ஓய்வுபெற்ற நீதிபதி, ஆறுமுகசாமி தலைமையிலான, விசாரணை கமிஷன் அமைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். அதன்படி விசாரணை கமிஷன் விசாரணை செய்து வருகின்றது.
இதில், சசி குடும்பத்தாரிடமும், ஜெ குடும்பத்தாரிடமும் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை நடத்தி வருகிறார். மேலும் ஜெயலலிதாவுடன் நெருங்கி பழகியவர்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றார்.
அதன்படி ஒவ்வொருவராக சம்மன் அனுப்பி விசாரணை செய்து வருகிறது விசாரணை ஆணையம். அந்த வகையில் ஜெயலலிதா மரணம் குறித்த ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு அப்போலோ நிர்வாகத்திற்கு விசாரணை ஆணையம் கடந்த சில தினங்களுக்கு முன்பாக உத்தரவிட்டது.
ஜெலலிதா சிகிச்சை குறித்த ஆவணங்களை தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்டு அப்போலோ தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய ஜனவரி 12 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கி அப்போலோ மருத்துவமனைக்கு விசாரணை ஆணையம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் என்ன என்பது குறித்த ஆவணங்களை இன்று ஆணையத்தில் அளித்துள்ளது.
75 நாட்கள் மருத்துவமனையில் இருந்த ஜெயலலிதாவுக்கு தரப்பட்ட சிகிச்சைகள் என்ன என்பது குறித்த தகவல்களை 2 பெட்டிகளில், நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் அளித்துள்ளது.
