ஆளுநர் வாகனம் மீது தாக்குதல்..? சட்டப்பேரவையில் அதிமுக அமளி...! தோல்வி அடைந்த தமிழக அரசு- இபிஎஸ் குற்றச்சாட்டு
தமிழக ஆளுநர் வாகனம் மீது தாக்குதல் நடத்தியதை கட்டுப்படுத்த தமிழக அரசு தவறிவிட்டதாக குற்றம்சாட்டி அதிமு, பாஜக சட்டமன்ற கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தததால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக ஆளுநருக்கு எதிர்ப்பு
நீட் தேர்விற்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதா மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென கூறி தமிழக ஆளுநர் அளித்த விருந்தை தமிழக அரசு புறக்கணித்தது. இதே போல சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தமிழக ஆளுநர் ரவி தலைமையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதாக உறுதியளித்திருந்த தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, வேளாண்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் விழாவில் கலந்துகொள்ளாமல் ஆளுநரின் விழாவை புறக்கணித்தனர். இதனால் தமிழக ஆளுநர்- தமிழக அரசுக்கு இடையே மோதல் போக்கு அதிகரித்துள்ளது. இதனையடுத்து மயிலாடுதுறை மாவட்டத்திற்கு சென்ற தமிழக ஆளுநருக்கு பல்வேறு கட்சிகள் சார்பாக கருப்பு கொடி காட்டி போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தின் போது ஆளுநர் வாகனம் மீது கல் எறியப்பட்டதாகவும், கம்புகள் வீசப்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன. இதற்கு தமிழக காவல்துறை மறுப்பு தெரிவித்திருந்தது.
அதிமுக-பாஜக வெளிநடப்பு
இந்தநிலையில் தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை விவாதத்திற்கு முன்னதாக நடைபெற்ற நேரம் இல்லா நேரத்தில் தமிழக ஆளுநர் வாகனம் மீது தாக்குதல் சம்பவம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அப்போது பேசிய எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழக ஆளுநருக்கே பாதுகாப்பு இல்லையென்றால் மக்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும் எனக்கூறி அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து தமிழக அரசின் செயல்பாட்டை கண்டித்து அதிமுக வெளிநடப்பு செய்தது. இதனை தொடர்ந்து வெளியே வந்து செய்தியாளர்களிடம் பேசிய எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி,
மயிலாடுதுறை மாவட்டத்திற்கு சுற்றுபயணம் செய்த ஆளுநர் ரவியின் வாகனம் மனமங்கலம் என்ற இடத்தில் கடந்த போது போராட்டக்காரர்கள் ஆளுநர் வாகனம் மீது மீதும், காவல்துறையினர் மீதும் கற்களையும், கம்புகளை வீசி தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் வண்மையாக கண்டிக்கதக்கது என கூறினார். மேலும் ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நூற்றுக்கணக்கானோர் கூடியிருந்தது தெரிந்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு போராட்டக்காரர்களை அப்புறப் படுத்த வில்லையென குற்றம்சாட்டினார்.
தோல்வி அடைந்த உளவுத்துறை
போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு காவல்துறை பாதுகாப்பு அளித்தது வருந்தத்தக்கது வேதனை அளிக்கக்கூடிய செய்தியென்றும் தெரிவித்தார். ஆளுநர் பயணம் தொடர்பாக முன்கூட்டியே தமிழக அரசு மற்றும் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தும் காவல்துறை தகுந்த முன்னேற்பாடுகள் மேற்கொள்ளவில்லையென்றும் தெரிவித்தார். எனவே இந்த பிரச்சனையில் உளவுத்துறை தோல்வி அடைந்துள்ளதாகவும், தமிழகத்தில் ஆளுநருக்கே பாதுகாப்பு இல்லாத போது சாமானிய மக்களுக்கு பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளதாகவும் குறிப்பிட்டார். தமிழகத்தில் சட்டம் ஒழங்கு முழுமையாக சீர்குலைந்து செயலிழந்து விட்டதாகவும் குற்றம்சாட்டினார். இதனை தொடர்ந்து தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் இருந்து தமிழக பாஜவும் தமிழக அரசின் செயல்பாட்டை கண்டித்து வெளிநடப்பு செய்தனர்.