முதல்வர் எடப்பாடி தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கியது - ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்பு
அதிமுக தலைமை அலுவலகத்தில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. இதில், ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர்.
கடந்த 4ம் தேதி டிடிவி.தினகரன் அதிமுக நிர்வாகிகளின் புதிய பட்டியலை வெளியிட்டார். இதற்கு அமைச்சர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். டிடிவி.தினகரன் கட்சியில் இல்லாதபோது, அவர் எப்படி நிர்வாகிகளை நியமிக்கலாம் என கேள்வி எழுப்பினர். இதனால், அதிமுகவில் சர்ச்சை ஏற்பட்டது.
இதைதொடர்ந்து அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடப்பதாக அறிவிக்கப்பட்டது.
இதையொட்டி இன்று காலை 10 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது.
அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு, ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி, பேரறிவாளன் ஆகியோருக்கு பரோல் வழங்குவது, ஓபிஎஸ் அணியுடன் பேச்சு வார்த்தை நடத்துவது உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்துவதாக தெரிகிறது.