The AIADMK candidate should make Madushudanan a successor in the majority vote in RKNagar

ஆர்.கே.நகரில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் மதுசூதனனை வெற்றி பெற செய்ய வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கழக உறுப்பினர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

ஆர்.கே.நகரில் வரும் டிசம்பர் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் அதிமுக சார்பில் மதுசூதனும் திமுக சார்பில் மருதுகணேஷும் பாஜக சார்பில் கரு.நாகராஜனும், சுயேட்சையாக டிடிவி தினகரன் உள்ளிட்டோரும் வேட்பாளர்களாக களம் இறங்குகின்றனர். 

கடந்த 4 ஆம் தேதியுடன் வேட்பு மனுதாக்கல் நேரம் முடிவுற்ற நிலையில், பரிசீலனை செய்து இன்று இறுதி பட்டியலை வெளியிட்டார் தேர்தல் நடத்தும் அலுவலர் வேலுச்சாமி. 

இதனிடையே நேற்று நடிகர் விஷாலின் மனு நிராகரிக்கப்படுவதாக தேர்தல் அலுவலர் தெரிவித்தார். காரணம் இரண்டு நபர்கள் விஷாலை முன்மொழியவில்லை என கூறப்பட்டது. ஆனால் ஆளுங்கட்சியை சேர்ந்த மதுசூதனன் ஆட்கள் மிரட்டியதாலேயே தனக்கு ஆதரவு தெரிவித்தவர்கள் பின்வாங்குகிறார்கள் என விஷால் குற்றம் சாட்டினார். 

அதற்கான ஆடியோ ஆதாரங்களையும் விஷால் வெளியிட்டார். ஆனாலும் தேர்தல் அலுவலர் முதலில் ஏற்றுக்கொண்டு பின்னர் நிராகரித்தார். 

இதற்கு மதுசூதனன் தரப்பு பகிரங்கமாக மறுப்பு தெரிவித்தது. இந்நிலையில், இன்று ஆர்.கே.நகரில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் என பலர் கலந்து கொண்டனர். 

அப்போது பேசிய முதலமைச்சர் எடப்பாடி ஆர்.கே.நகரில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் மதுசூதனனை வெற்றி பெற செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். 

அதிமுக வலுவான இயக்கம் என்றும், ஜெயலலிதா இல்லாமல் முதல் தேர்தலை சந்திக்கிறோம் என்றும் கூறியுள்ளார்.

இந்திய துணை கண்டமே ஆர்.கே.நகர் இடைத்தேர்லை உற்றுநோக்கியுள்ளது என்றும் எம்.ஜி.ஆர் எந்த நோக்கத்தில் கட்சி ஆரம்பித்தாரோ அதை நிறைவேற்றுவோம் என்றும் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.