EPS Vs OPS:ஓபிஎஸ்சை ஆதரித்த மாவட்ட செயலாளர்கள்.! திடீரென இபிஎஸ் அணிக்கு பல்டி.. அதிர்ச்சியில் ஒருங்கிணைப்பாளர்
ஒற்றை தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு தெரிவித்து இருந்த 12 மாவட்ட செயலாளர்களில் 2 பேர் இபிஎஸ் அணிக்கு தாவியதால் ஓபிஎஸ் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பொதுக்குழு கூட்டத்திற்கு ஒத்துழைப்பு
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எடப்பாடி பழனிசாமி தான் அதிமுகவின் ஒற்றை தலைமை என அதிமுக மூத்த நிர்வாகிகள் கூறி வருகின்றனர். 75 மாவட்ட செயலாளர்களில் இபிஎஸ் அணிக்கு 63 பேரும் ஓபிஎஸ் தரப்புக்கு 12 மாவட்ட செயலாளர்கள் ஆதரவு தெரிவித்து இருந்தனர். இதன் காரணமாக ஒற்றை தலைமையாக இபிஎஸ் தேர்வாகும் சூழல் உருவாகியுள்ளது. ஓபிஎஸ் தரப்போ பொதுக்குழு கூட்டத்தை தற்போதைக்கு நடத்த வேண்டாம் ஒத்திவைக்க வேண்டும் என இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் இந்த கோரிக்கையை இபிஎஸ் ஆதரவாளர்கள் நிராகரித்துள்ளனர். திட்டமிட்டபடி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழுவில் 2600க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ள நிலையில், 2300பொதுக்குழு உறுப்பினர்கள் பொதுக்குழுவை நடத்தவும் பொதுக்குழுவில் கலந்து கொள்வோம் என உறுதி அளித்தும் எழுத்துப்பூர்வமாக கையெழுத்திட்டு மாவட்ட செயலாளர்கள் மூலம் கடிதத்தை அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியிடம் ஆதரவு அளித்துள்ளனர்.
இபிஎஸ் அணிக்கு தாவிய ஓபிஎஸ் ஆதரவாளர்கள்
இந்தநிலையில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் ஓ,பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்த தேனி மாவட்ட செயலாளர் சையது கான் , சென்னை தெற்கு கிழக்கு மாவட்ட செயலாளர் வேளச்சேரி அசோக், கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் அசோகன், திருவள்ளுவர் தெற்கு மா.செயலாளர் அலக்சாண்டர் , திருவள்ளூர் வடக்கு மா.செயலாளர் சிறுணியம் பலராமன் , திருச்சி மாநகர் மா.செ வெள்ளமண்டி நடராஜன் , தஞ்சாவூர் தெற்கு வைத்தியலிங்கம், வடக்கு சுப்ரமணி, பெரம்பலூர் ராமச்சந்திரன், அரியலூர் மாவட்ட செயலாளர் தாமரை ராஜேந்திரன் ஆகிய மாவட்டச் செயலாளர்கள் மட்டுமே தற்போது ஓ.பி.எஸ் க்கு ஆதரவாக உள்ளனர். இதுவரை அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம் ஆதரவாக இருந்த நெல்லை மாவட்ட செயாலளர் தச்சை கணேஷ ராஜா, மற்றும் விருதுநகர் மாவட்ட செயலாளர் சாத்தூர் ரவிச்சந்திரன் எடப்பாடி பழனிச்சாமிக்கு இன்று ஆதரவளித்துள்ளனர் ஓபிஎஸ் ஆதரவாக 12 மாவட்டச் செயலாளர்கள் உள்ளதாக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் தெரிவித்திருந்த நிலையில், தற்போது 10 மாவட்டச் செயலாளர்கள் மட்டுமே ஆதரவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.