The act of the speaker is against justice told judge sundar
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் சபாநாயகரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும், இப்பிரச்சனையில் சபாநாயகர் தனபால் காழ்ப்புணர்ச்சியுடன் தவறான முடிவு எடுத்துள்ளார் என்றும் உயர்நீதிமன்ற நீதிபதி சுந்தர் கடுமை காட்டியுள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என்றும், எனவே அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களான தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல் உள்ளிட்ட 18 பேர் கடந்த ஆண்டு ஆளுநராக இருந்த வித்யா சாகர் ராவிடம் புகார் கொடுத்தனர். இதையடுத்து அந்த 18 பேரையும் சபாநாயகர் தனபால் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 18 ஆம் தேதி தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. இதில் முதலில் தீர்ப்பளித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, சபாநாயகரின் உத்தரவில் நீதிமன்றம் தலையிடமுடியாது என தெரிவித்தார். அதனால் 18 எம்எல்ஏக்களை அவர் தகுதி நீக்கம் செய்தது செல்லும் என தீர்ப்பளித்தார்.

இதைத் தொடர்ந்து தீர்ப்பளித்த நீதிபதி சுந்தர், தான் தலைமை நீதிபதியின் தீர்ப்பில் இருந்து வேறுபடுவதாக கூறினார். சபாநாயகர் உத்தரவில் நீதிமன்றம் தலையிடலாம் என்றும், அதற்கு நீதிமன்றத்துக்கு உரிமை உள்ளது என தெரிவித்தார்.
இந்த 18 எம்எல்ஏக்கள் விஷயத்தில் சபாநாயகர் துரோகம் இழைத்துவிட்டார் என்றும், இவரது முடிவு இயற்கையான நீதிக்கு எதிரானது என்றும் கண்டனம் தெரிவித்தார். 18 எம்எல்ஏக்கள் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியால் சபாநாயகர் எடுத்த இந்த தவறான முடிவை ரத்து செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இப்பிரச்சனையில் சபாநாயகரின் நடவடிக்கை ஒருதலைப்பட்சமானது என்றும் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தின்படி சபாநாயகர் செயல்படவில்லை என்றும் நீதிபதி சுந்தர் கடுமையான கண்டனத்தை தெரிவித்தார்.
