ஆண்டவர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு..? மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் விலகல்..!
மக்கள் நீதி மய்யம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து பொதுச் செயலாளர் முருகானந்தம் விலகுவதாக அறிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து பொதுச் செயலாளர் முருகானந்தம் விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ’’100 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியதே தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தோற்க காரணம். நேர்மையான, சுதந்திரமான வழியில் மக்களுக்கான சமூகப் பணியாற்ற மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தேன், ஆனால் இன்று அதற்கான சூழல் அங்கு முற்றிலுமாக இல்லை என்ற நிலையில் கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் அடிப்படை உறுப்பினர் என்ற நிலையிலிருந்தும் விலகுகிறேன்.
அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட போதுமான வேட்பாளர்கள் நம்மிடம் இல்லை என்று கமல்ஹாசன் கூறினார். கட்சியில் சர்வாதிகாரம் இருக்கிறது ஆகையால், மக்கள் நீதி மய்யம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுகிறேன்’’ என அவர் தெரிவித்துள்ளார். அவருடன் சேர்ந்து 2200பேர் அக்கட்சியிலிருந்து விலகினர்.
முருகானந்தம், மக்கள் நீதி மய்யம் சார்பில் திருவெறும்பூர் தொகுதியில் போட்டியிட்டவர். முன்னதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர் டாக்டர் மகேந்திரன் கட்சியை விட்டு வெளியேறினார். அடுத்தடுத்து நிர்வாகிகள் வெளியேறினர். நேற்று கோவை தென் கிழக்குமாவட்ட இளைஞரணி செயலாளர் தினேஷ்குமார் கட்சியை விட்டு வெளியேறினார். முக்கிய நிர்வாகிகளில் பொன்ராஜ், சி.கே.குமரவேல் மட்டுமே கட்சியில் நீடிக்கின்றனர்.