எண்ணூர் மக்களோடு என் நன்றியும் சேரும்! ஆட்சியருக்கு நன்றி சொன்ன ஆண்டவர்!
எண்ணூர் துறைமுக கழிமுகப் பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் சுந்தரவல்லி உறுதி கூறியதற்கு, நடிகர் கமல் ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார்.
கொசஸ்தலை ஆற்றில் எண்ணூர் துறைமுக கழிமுகம், சாம்பல்குளம் பகுதிகளில் வல்லூர், வடசென்னை அனல்மின் நிலையங்களின் சாம்பல் கழிவுகள் கொட்டப்படுவதாக நடிகர் கமலஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் புகார் தெரிவித்திருந்த நிலையில் இன்று அதிகாலை அப்பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து அங்கிருந்த பொதுமக்களை சந்தித்த கமல்ஹாசன், அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
மக்கள் பிரச்சனைக்காக முதன் முதலில் நேரடியாக களத்தில் இறங்கியதற்கு நடிகர் கமல் ஹாசனுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
கொசஸ்தலை ஆற்றில் கழிவுகள் கொட்டப்படுவது தொடர்பாக கமல் ஹாசன் இன்று பார்வையிட்டது குறித்து மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாராட்டு தெரிவித்திருந்தார். எண்ணூர் பகுதியில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை மீட்கவும், அப்பகுதியை சுத்தம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.
இதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், நடிகர் கமல் ஹாசனுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், கமல் ஹாசன், தீவிரமான மக்கள் பணியில் ஈடுபட இருக்கிறார் என்பதையே, இந்த களப்பணி உணர்த்துவதாக கூறியுள்ளார். மேலும், கமலுக்கு பாராட்டும் தெரிவித்தார்.
இதற்கு நடிகர் கமல் ஹாசன், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனுக்கு நன்றி தெரிவித்து டுவிட் செய்திருந்தார்.
இந்த நிலையில் கொசஸ்தலை ஆற்றில், எண்ணூர் கழிமுகம், சாம்பல்குளம் பகுதிகளில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி இன்று ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வுக்குப் பிறகு ஆட்சியர் சுந்தரவல்லி, செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், எண்ணூர் துறைமுக கழிமுகப் பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி தெரிவித்திருந்தார்.
எண்ணூர் துறைமுக கழிமுகப் பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் சுந்தரவல்லி கூறியதற்கு நடிகர் கமல் ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கமல், தனது டுவிட்டர் பக்கத்தில், தானே முன்வந்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்த ஆணையர் சுந்தரவல்லி அவர்களுக்கு, எண்ணூர் பகுதி குப்பத்து குடும்பங்களோடு என் நன்றியும் சேரும் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.